முதல் கணவரின் பிள்ளையை அடித்துக்கொன்ற இரண்டாவது கணவன்- திருச்சியில் கொடூரம்
மனைவியின் முதல் கணவனுக்கு பிறந்த குழந்தையை அடித்து துன்புறுத்தி கொடூரமாக கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொலையை மறைத்த குற்றத்திற்காக அந்த குழந்தையின் தாயும் சிறைக்கு சென்றுள்ளார்.
திருச்சி: ஐந்து வயது சிறுமி மரணத்தில் திடீர் திருப்பமாக குழந்தையின் அம்மாவும், அவரது இரண்டாவது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அடித்து கொன்று விட்டு நாடகமாடிய தம்பதியர் இப்போது சிறையில் கம்பி எண்ணுகின்றனர்.
உயிரிழந்த சிறுமியின் பெயர் லத்திகா. ஐந்து வயதான லத்திகா துறுதுறுப்பாக இருப்பாள். டிவி பார்ப்பதில் அதிக விருப்பம். இரு தினங்களுக்கு முன்பு குழந்தை உடம்பு முழுக்க காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்து விட்டாள். அம்மா அடித்ததில் மயக்கமான சிறுமி மரணமடைந்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால் காரணம் வேறாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழவே காவல்துறையினர் தங்கள் பாணியில் விசாரணை நடத்தியதில் பல உண்மைகள் வெளி வந்தன.

திருச்சி காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்த நித்தியகமலா ஆசிரியையாக பணிபுரிகிறார். தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. லத்திகாஸ்ரீ என்று பெயரிட்டு வளர்த்தனர். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே இருவரும் பிரிந்து விட்டனர். பெண் குழந்தை என்பதால் தன்னுடன் வைத்துக்கொண்டார் நித்தியகமலா. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தனது அம்மா வீடு உள்ள அழகியகவுண்டனூரில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் உடற்கல்வி ஆசிரியர் முத்துப்பாண்டியனை இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்து கொண்டார் நித்யகமலா. நேரம் சரியில்லை என்று கூறி காட்டுப்புதூருக்கு குடியேறினர். பிரபல பள்ளியில் லத்திகாஸ்ரீயை சேர்க்க முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. இருவரும் ஆசிரியர் வேலைக்கு செல்லவும் முடிவு செய்திருந்தனர். இந்த சூழ்நிலையில்தான் கடுமையாக தாக்கப்பட்டு குழந்தை லத்திகாஸ்ரீ உயிரிழந்திருக்கிறாள்.
குக்கர் மூடியால் தாக்கியும், வயர்கள், குச்சியால் அடித்ததில் குழந்தை மயக்கமடைந்திருக்கிறாள். உடனடியாக காட்டுப்புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழந்தையை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் வழியிலேயே குழந்தை மரணமடைந்தாள்.
குழந்தைகள் நல ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில் காட்டுப்புதூர் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து நித்யகமலாவையும், முத்துப்பாண்டியையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இருவர் மீதும் 302வது செக்சன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. லத்திகாஸ்ரீயை அடித்து கொலை செய்தது ஏன் என்று அக்கம் பக்கத்தினரும் விசாரித்ததில் புதிதாக குடி வந்தவர் என்பதால் யாருக்கும் எதுவும் தெரியவில்லை.
முதல் கணவர் பிரசன்னாவிடம் முறையாக விவாகரத்து பெறாமல் முத்துப்பாண்டியை திருமணம் செய்து கொண்டாராம் நித்யா. முத்துப்பாண்டியும் ஏற்கனவே திருமணமானவராம். இருவரும் இடைஞ்சலாக இருக்கும் என்பதால் குழந்தையை கொன்று விட்டு நாடகமாடுகிறார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications