அண்ணாமலை சொல்றாருன்னு! காமெடி பண்ணாதீங்க பாஸ்! கலாய்த்து விட்ட சு.வெங்கடேசன் எம்.பி.!
திருச்சி: அண்ணாமலை கூறுவதையெல்லாம் கேள்விகளாக கேட்டு காமெடி பண்ண வேண்டாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன் மூலம் அண்ணாமலைக்கு எல்லாம் தன்னால் பதில் கூறிக்கொண்டிருக்க முடியாது என்பதை சூசகமாக தெரிவித்திருக்கிறார்.
திருச்சியில் ரயில்வேயின் DREU மாநாட்டில் பங்கேற்க வந்த அவர் இதனைக் கூறினார்.
வம்புசண்டைக்கு வர்றீங்களா?மோடி முன்பாக போட்டி அரசியலா? முதல்வர் ஸ்டாலின் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்
பிரதமர் பதிலளிப்பார்
மேலும் அப்போது பேசிய அவர், ''தமிழகத்தின உரிமை சார்ந்த விஷயங்களை பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கு மேடையிலேயே பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், முதல்வரின் கோரிக்கைகளுக்கு விரைவில் பிரதமர் பதில் அளிப்பார் என்று நம்புகிறேன்.''
அண்ணாமலை கேள்வி
'கச்சத்தீவை தாரை வார்த்தது திமுக- காங்கிரஸ், அதை பாஜக மீட்க வேண்டுமா? என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருக்காரே?" என்ற கேள்விக்கு, "பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களின் உரிமைக்காக இவர்கள் எவ்வளவு எல்லை மீறிப் போயிருக்கிறார்கள் என்பது பின்னோக்கி சென்று பார்த்தால் தெரியும். அதற்காக சட்டத்தை வளைத்தும், சட்டங்களை புதிதாக உருவாக்கியும் இருக்கிறார்கள்.''
கச்சத்தீவு மீட்பு
''அதேபோல, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது தமிழக மக்களின் நீண்ட நாள் கனவு. அதை தற்போது அதிகாரத்தில் உள்ள பாஜக மீட்டுத் தர வேண்டும்" என்றார். "ராஜபக்சே உடன் பேசிய ஆடியோவை வெளியிடுவேன்" என்று அண்ணாமலை கூறியிருக்கிறாரே?" என்ற கேள்விக்கு, "நிறைய ஆடியோக்கள் இருக்கு என்கிறார்கள். அத்தனையும் வெளியே வரட்டும். வந்தபின்பு கேட்டுவிட்டு சொல்கிறேன்" என்றார்.
காமெடி வேண்டாம்
"இலங்கை தமிழர்களின் முதல் எதிரியே திமுக தான் என்று அண்ணாமலை குற்றம்சாட்டுகிறாரே..?" என்ற கேள்விக்கு, "காமெடி பண்ணாதீங்க பாஸ்.." என்றார். சு.வெங்கடேசனின் இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.