திருச்சி மாவட்டம் என்றாலே ஸ்பெஷல் தான்! புத்தாண்டு பரிசாக அள்ளிக் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
திருச்சி: திருச்சி மாவட்டத்துக்கு புத்தாண்டு பரிசாக மொத்தம் ரூ.625.76 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
அண்ணா காலம் தொட்டே திமுகவுக்கும் திருச்சிக்கும் எப்போதுமே ஒரு பந்தம் இருந்து வரும் சூழலில் திருச்சி மாவட்டத்தை ஸ்பெஷலாக கவனித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
இது தொடர்பான விவரம் வருமாறு;
துணை முதலமைச்சர் பதவிக்கு நிகரான பொறுப்பை கையாள்கிறார் உதயநிதி ஸ்டாலின்! அன்பில் மகேஷ் பேச்சு!
திறந்து வைத்த முதல்வர்
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 33 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவில் பாலக்கிருஷ்ணம்பட்டி, உப்பிலியபுரம், கூத்தப்பார், ச. கண்ணனூர், சிறுகமணி ஆகிய பேரூராட்சிகளிலும், இலால்குடி, மணப்பாறை ஆகிய நகராட்சிகளிலும் மேம்படுத்தப்பட்ட பூங்காங்கள் மற்றும் சாலைகள், புதிய பாலங்கள், குழந்தைகள் மையம், உயர்கோபுர மின் விளக்குகள் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மணப்பாறை வட்டாரம்
மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதல் கட்டடங்கள், வாரச்சந்தையில் நுண் உரம் தயாரிக்கும் மையம், உயர்கல்வித் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி, ஈவெ.ரா. பெரியார் கல்லூரி வளாகத்தில் 60 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தேர்வுக் கட்டுப்பாட்டு மையத்திற்கான புதிய கூடுதல் அலுவலகக் கட்டடம்; வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 2 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் திருச்சிராப்பள்ளி - கிழக்கு மற்றும் மேற்கு, சிறுகாம்பூர், துறையூர், மணப்பாறை, வையம்பட்டி, வளநாடு, தொட்டியம், சோமரசம்பேட்டை, மணிகண்டம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளருக்கான குடியிருப்புடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள், மணப்பாறையில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் குடியிருப்புக் கட்டடம் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.
அடிக்கல் நாட்டினார்
உயர்கல்வித் துறை சார்பில் மணப்பாறை வட்டம், பண்ணப்பட்டி மேல்பாகம் கிராமத்தில் ரூபாய் 14 கோடியே 95 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிக் கட்டடம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 7 கோடியே 25 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மணப்பாறை நகராட்சி - புத்தாநத்தம், திருமலையான்பட்டியில் புதிய துணை சுகாதார நிலையம் மற்றும் இலால்குடி அரசு மருத்துவமனையில் 50 படுக்கைகளுடன் கூடிய தாய்-சேய் நலக் கட்டடங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
நலத்திட்ட உதவிகள்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் 6.86 கோடி ரூபாய் மதிப்பில் 1448 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் பிரதமமந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 33.40 கோடி ரூபாய் மதிப்பில் 1392 பயனாளிகளுக்கு குடியிருப்புகள், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டிகள், கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை என 77.02 இலட்சம் ரூபாய் மதிப்பில் 11,746 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர்.
எண்ணற்ற பயனாளிகள்
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம், நுண்ணீர் பாசனத் திட்டம், நெல் விதைகளுக்கான உற்பத்தி மானியம், எண்ணெய் வித்து உற்பத்தி மானியம் என 1.16 கோடி ரூபாய் மதிப்பில் 354 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் பண்ணை குட்டை அமைத்தல், சோலார் மின் மோட்டார் அமைத்தல், மானியத்தில் மின் மோட்டார் வழங்குதல், உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மதிப்புக்கூட்டு இயந்திரங்கள் வழங்குதல் என 2.48 கோடி ரூபாய் மதிப்பில் 147 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், கூட்டுறவுத் துறை சார்பில் பயிர்கடன், மத்தியக்காலக் கடன், சம்பளச் சான்று கடன், மகளிருக்கான கடன், கைம்பெண்களுக்கான கடன் என 6.58 கோடி ரூபாய் மதிப்பில் 715 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள், மூன்று சக்கர சைக்கிள்கள், ஊன்றுகோல், சிறு,குறு தொழில்களுக்கான வங்கிக்கடன், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் என 57.71 இலட்சம் ரூபாய் மதிப்பில் 591 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.