பாமக இரண்டாக உடைய வாய்ப்பு? தந்தையும், மகனும் கண்டிப்பாக அதைச் செய்வார்கள்.. திருமாவளவன் கணிப்பு!
திருச்சி: பாமக இரண்டாக உடைய வாய்ப்பே இல்லை என்றும், ஒரு கட்டத்தில் தந்தையும், மகனும் இணைந்தே தேர்தலை சந்திப்பார்கள் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது என்று கூறிய அவர், டிடிவி தினகரனின் முதல்வர் வேட்பாளர் தொடர்பான கருத்துக்கு அதிமுக தான் பதில் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதும், ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி நீக்குவதும் என்று நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது. சீனியர்கள் ராமதாஸ் பக்கம் நிற்க, இளைஞர்கள் அன்புமணிக்கு ஆதரவாக இருப்பதாக பார்க்கப்படுகிறது.

ராமதாஸ் vs அன்புமணி
இதனிடையே பாமக தலைவர் அன்புமணி டெல்லி சென்று திரும்பி இருக்கிறார். டெல்லியில் அன்புமணி சில பாஜக தலைவர்களை சந்தித்ததாக கூறப்படுகிறது. ஆனால் தேர்தல் ஆணைய நிர்வாகிகளை சந்திக்கவே அன்புமணி டெல்லி சென்றதாக சொல்லப்படுகிறது. இதன்பின் பாமக எம்எல்ஏ அருளை குறி வைத்து அன்புமணி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அருள் மீது அட்டாக்
அவரை கொறடா பதவியில் இருந்து நீக்க கடிதம் அளிக்க வைத்ததோடு, அருளை மொத்தமாக கட்சியில் இருந்தும் நீக்கி அறிவித்தார். இந்த நிலையில் இன்று ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் ஜூலை 8ஆம் தேதி பாமக செயற்குழு கூட்டம் ஓமந்தூரில் உள்ள திருமண மண்டபத்தில் ராமதாஸ் தலைமையில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்குழு கூட்டம்
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தந்தை - மகன் இடையிலான மோதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் பாமக இரண்டாக பிரியுமா என்ற பேச்சுகள் எழுந்துள்ளன. ஏற்கனவே அன்புமணி பாமகவை கையில் எடுக்க முடிவு செய்துவிட்ட நிலையில், ராமதாஸ் கடைசி வரை நான்தான் தலைவர் என்பதில் விடாபிடியாக இருக்கிறார்.
திருமாவளவன் கணிப்பு
இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவனிடம் கேட்ட போது, பாமக இரண்டாக பிரிய வாய்ப்பே இல்லை. தந்தையும், மகனும் ஒரு கட்டத்தில் ஒன்று சேர்ந்து தேர்தலை ஒன்றாக சந்திப்பார்கள் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார். அதேபோல் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
அதிமுக விவகாரம்
அதிமுக கூட்டணியில் முதல்வர் யார் என்பதை தேர்தலுக்கு பின் முடிவு எடுக்கப்படும் என்று டிடிவி தினகரன் கூறி இருக்கிறார். அதற்கு அந்த கூட்டணியில் உள்ள பெரிய கட்சியாக அதிமுகவும், அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தான் கருத்து கூற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications