அரச மதமாக “இந்து”.. பாஜக சதி என திருமா பகீர்! இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் ஒற்றுமையா இருக்கனுமாம்
திருச்சி: பாஜகவை ஆட்சியிலிருந்து விரட்டியடிக்க இந்து, முஸ்லிம், கிறிஸ்தவா்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம் என திருச்சி பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் தெரிவித்து இருக்கிறார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் வெறுப்பு அரசியல் மற்றும் சிறுபான்மை சமூகத்தின் மீதான தாக்குதல், மணிப்பூர் அரியானா கலவரங்கள் போன்றவற்றை கண்டித்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் திருச்சி பாலக்கரையில் தமஜக மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தலைமையில் நடைபெற்றது.

இதில் தமஜக மாநிலத் தலைவர் கே.எம்.ஷரீப், ஜமாத்துல் உலமா சபை மாவட்ட தலைவர் முப்தி முஹம்மது ரூஹுல் ஹக் ஹஜ்ரத், சிவத்திரு திருவடிக்குடி சுவாமிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவரும், இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவரும் மாவட்ட தலைவருமான கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் - அமைப்புகளின் தலைவர்கள் பங்கு கொண்டு உரையாற்றினார்கள்.
மதவெறி வெறுப்பு அரசியலுக்கு எதிரான இந்த பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "இஸ்லாமியா்களும், கிறிஸ்தவா்களும் இந்துக்களுக்கு எதிரானவா்கள் என சித்தரிப்பதன் மூலம் 100 சதவீத இந்துக்களின் வாக்குகளைப் பெறும் யுக்தியை பாஜகவினா் திட்டமிட்டு செய்து வருகின்றனா்.
இத்தகைய வெறுப்பு அரசியலை மக்களிடம் விதைப்பதின் மூலம் எதிா்க்கட்சிகளை பேச விடாமல் திக்குமுக்காட செய்து வருகின்றனா். பாஜகவினா் புனித பசு, லவ் ஜிகாத் என இல்லாத கட்டுக்கதைகளைக் கூறி, இந்துக்களை மூளைச்சலவை செய்கின்றனா். தொடா்ந்து இந்துக்களை வன்முறையாளா்களாக உருவாக்குவதே பாஜகதான்.
எனவே, பாஜக, சங்பரிவாா் அமைப்புகள் இஸ்லாமியர்கள், கிறிஸ்வா்களுக்கு மட்டும் எதிரிகள் அல்ல. இந்துக்களுக்கும் எதிரிகளே. பாஜகவுக்கு இந்தியாவை இந்து ராஜ்ஜியமாக மாற்ற வேண்டுமென்பதே இலக்கு. அதை நோக்கி, அரச மதமாக இந்து மதத்தை மாற்ற முயற்சி நடக்கிறது.
இதற்காக சமத்துவம், சகோதரத்துவம், மதச்சாா்பின்மை உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் அரசியலமைப்புச் சட்டத்தை நீா்த்துப் போக முயற்சி செய்து வருகின்றனா். அரச மதமாக இந்து மதம் அறிவிக்கப்பட்டால் சனாதானமே கோலோச்சும். ஜாதி, மத சண்டைகள் பெருகி, சமூக நீதி மறுக்கப்படும். பெண்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க நேரிடும்.

இதற்காக பிரிவினைவாத அரசியலை பாஜகவினா் கையிலெடுத்து, பட்டியல் ஜாதி மக்களை ஒன்றிணையவிடாமல் செய்து, ஜாதி ரீதியாகப் பிரித்து வைத்து சலுகைகளை அறிவிக்கின்றனா். நாட்டில் அதிக எண்ணிக்கையில் உள்ள பட்டியலினத்தவா்கள் ஒன்றிணைந்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விடும் என்பதை உணா்ந்தே இவ்வாறு செய்கின்றனா்.
வரும் 2024 நாடாளுமன்றத் தோ்தலில் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க, சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்த சகோதரத்துவத்தை வளா்க்க, வளா்ச்சிப் பாதையில் செல்ல பாஜகவை ஆட்சியிலிருந்து விரட்டியடிப்போம். இதற்காக இந்து, முஸ்லிம், கிறிஸ்தவா்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம் அவர் பேசினார்." என்று தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications