முதலில் ஐஜி சொன்னார்.. இதோ.. கமிஷனரும் சொல்லி விட்டார்.. விஜயரகு கொலைக்கு முன்விரோதமே காரணமாம்!
பாஜக பிரமுகர் விஜயரகு கொலை சம்பவம் குறித்து கமிஷனர் பேட்டி தந்துள்ளார்
திருச்சி: ஏற்கனவே ஐஜி சொல்லிட்டாரு.. இப்போ கமிஷனரும் கறாரா சொல்லி உள்ளார்.. திருச்சி பாஜக பிரமுகர் படுகொலை தனிப்பட்ட விவகாரம்தான்.. முன்விரோதத்தில்தான் இந்த கொலை நடந்தது என்று!
திருச்சி பாலக்கரை பாஜக பிரமுகர் விஜயரகு 2 தினங்களுக்கு முன்பு காந்தி மார்க்கெட்டில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகமது பாபு என்ற மிட்டாய் பாபு மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வந்தனர்.
குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என பாஜகவும் வலியுறுத்தி வந்த நிலையில், மிட்டாய் பாபு உள்ளிட்ட 2 பேரை தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்தனர்.

இதனிடையே, இந்த கொலை சம்பவம் மதரீதியானது கிடையாது, குடும்ப தகராறுதான் என்று திருச்சி கமிஷனர் அமல்ராஜ் விளக்கம் அளித்திருந்தார். ஆனாலும் எச்.ராஜா உள்ளிட்ட பாஜக தலைவர்களும் பிரமுகர்களும் இது திட்டமிட்ட படுகொலை என்று இனரீதியாகவும், போலீசுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என்று அர்ஜுன் சம்பத் கோரிக்கை வைத்திருந்தார்.
"கமிஷனர் அமல்ராஜ் ஏன் இப்படி பேசுகிறார்? மறைமுகமாக இந்த விசாரணையை இப்படித்தான் நடத்த வேண்டும் என்று சொல்ல வருகிறாரா.. தமிழகம் முழுவதும் இஸ்லாமிய பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுகிறது.. முறையான விசாரணை வேண்டும்" என்று எச்.ராஜா கொந்தளித்து கேட்டிருந்தார். இந்நிலையில், கமிஷனர் வரதராஜு, பாஜக பிரமுகர் விஜயரகு கொலை பற்றி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, "விஜயரகு கொலை முன்விரோதம் காரணமாக நிகழ்ந்துள்ளது. இதில் முக்கிய குற்றவாளி பாபு என்கிற மிட்டாய் பாபுவுக்கும் கொலை செய்யப்பட்ட விஜயரகுவிற்கும் கடந்த ஒரு வருஷமாகவே தனிப்பட்ட முறையில் முன்விரோதம் இருந்து வந்திருக்கிறது. கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை உடனடியாக கைது 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தோம். தற்போது, சென்னை போலீசார் உதவியுடன் மிட்டாய் பாபு, அவரது நண்பர் ஹரி பிரசாத் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டது..
அந்த புலன் விசாரணையில் கொலைக்கு உடந்தையாக இருந்த மிட்டாய் பாபுவின் நண்பர்கள் சுடர் வேந்தன்,சஞ்சய் என்ற சச்சின்,யாசர் என்கிற முகமது யாசர் உள்ளிட்ட 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், பைக் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.... இன்னும் இதில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்ற விசாரணையும் நடத்தி வருகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications