வாய்பேச முடியாதோருக்கு பிரத்யேக முகக்கவசம்... திருச்சியை சேர்ந்த இளம் மருத்துவரின் புதிய முயற்சி
திருச்சி: வாய்பேச முடியாதோர் மற்றும் காதுகேளாதோர் தங்கள் உணர்வை வாய் சைகை மூலம் பிறருக்கு தெரியப்படுத்தும் வகையில் அவர்களுக்காக பிரத்யேக முககவசத்தை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இளம் மருத்துவர் ஒருவர்.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை சேர்ந்தவர் மருத்துவர் ஹக்கீம். எம்.பி.பி.எஸ். முடித்துள்ள இவர் தற்போது திருச்சியில் உள்ள முன்னணி தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வாய்பேச முடியாதோர் மற்றும் காதுகேளாதோருக்காக மனிதநேய அடிப்படையில் பிரத்யேக முகக்கவசத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

வாய்பேச முடியாதோர் முகக்கவசம் அணிந்துகொண்டால் சைகை மூலம் அவர்கள் கூற வருவதை பிறரால் எளிதாக புரிந்துகொள்ள முடியாது. இதற்காக இப்போது உள்ள சூழலில் வாய்பேச முடியாதோர் முகக்கவசம் அணியாமலும் இருக்க முடியாது. கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஒவ்வொருவரும் முககவசம் அணிவது அவசியம் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் இதனைக் கருத்தில்கொண்ட மருத்துவர் ஹக்கீம், என்.95 மாஸ்கில் உள்ள சில பகுதியை நீக்கிவிட்டு அதற்கு பதில் லேடிக்ஸ் 3 காகிதத்தை (latex 3 paper) இணைத்துள்ளார். இதன் மூலம் வாய்பேச முடியாதோரின் சைகைகளையும், வாய் அசைவுகளையும் மூலம் எளிய முறையில் பிறர் புரிந்துகொள்ள முடியும்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய மருத்துவர் ஹக்கீம், லேடிக்ஸ் 3 காகிதத்தை பொறுத்தவரை மூச்சுவிடுவதற்கு எந்த சிரமும் இருக்காது என்றும், மற்ற ஜரிகைகள், பிளாஸ்டிக் பைகளை போன்று லேடிக்ஸ் 3 காகிதத்தில் fog படியாது எனவும் தெரிவித்தார். முழுக்க முழுக்க மனிதாபிமான அடிப்படையில் இந்த முயற்சியில் தாம் இறங்கியுள்ளதாகவும், இதற்கான அனுமதி கிடைத்தவுடன் பிரத்யேக முறையில் 1,000 முககவசம் தயாரித்து அதனை வாய்பேச முடியாதோர் மற்றும் செவிதிறனற்றோருக்கு இலவசமாக கொடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

இதனிடையே இந்த இளம் மருத்துவர் ஹக்கீமின் தந்தை பிரபல நரம்பியல் நிபுணர் அலீம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீனாகவும் இருந்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications