கலாய்த்த நேரு.. குபீரென சிரித்த அன்பில் மகேஷ்.. வெட்கப்பட்ட மேயர் அன்பழகன்.. நெகிழ்ந்த திருச்சி
திருச்சி மேயருக்கு அமைச்சர்கள் வாழ்த்து சொன்னார்கள்
திருச்சி: திருச்சி மாநகராட்சியில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், திமுக மாநகரச் செயலாளரும், முன்னாள் துணை மேயருமான அன்பழகன், திருச்சி மாநகராட்சி மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
21 மாநகராட்சிகளுக்கான மேயர் பதவியில் கும்பகோணம் மாநகராட்சி மட்டும் காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள 20 மாநகராட்சிகளுக்கான மேயர் பதவிகளை திமுக கைப்பற்றியது.. நேற்றைய தினம் திமுக தலைமையில் எந்தெந்த மாநகராட்சியில் யார் யார் யார் என பெயர்களை வெளியிட்டது...

துணை தலைவர்
அதன்படி, தமிழகத்தில் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகர்மன்றத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது... திருச்சி மாநகராட்சியைப் பொருத்தவரையில் திமுக மேயர் வேட்பாளராக மு.அன்பழகன் அறிவிக்கப்பட்டிருந்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் திருச்சி மேயராக அன்பழகன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சர்கள்
இதையடுத்து அவருக்கு திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்ற மேயர் அன்பழகனுக்கு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் வாழ்த்துத் தெரிவித்தனர். பிறகு நேருவும், அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருவரும் அவரை மேயர் இருக்கையில் அமர வைத்தனர். மேயருக்குரிய அங்கியை (கவுனை) அணிவித்தனர்.. அப்போது அமைச்சர் நேரு, "இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.." என்று கமெண்ட் அடிக்க,மேயர் அன்பழகன், கலெக்டர் சிவராசு, எஸ்பி கார்த்திகேயன் உட்பட அனைவரும் குபீரென சிரித்தனர்.

கடந்து வந்த பாதை
மேயராக பதவி ஏற்றுள்ளஅன்பழகன், 1980-ம் ஆண்டு முதல் திமுகவில் பணியாற்றி வருகிறார். 1993 முதல் 1998-ம் ஆண்டு வரை மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர் பதவி வகித்தார். 1999-ம் ஆண்டு முதல் திருச்சி மாநகர செயலாளர் பதவி வகித்து வருகிறார். கடந்த2001 முதல் 2011-ம் ஆண்டு வரை துணை மேயராக பதவி வகித்து வந்தார்... கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் 3 லட்சத்து 8 ஆயிரத்து வாக்குகள் பெற்று 2-ம் இடம் பெற்றார். இப்போது நடந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 27வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாநகராட்சி மேயராக இன்று பதவியேற்றுள்ளார்.

குப்பையில்லாத மாநகராட்சி
மேயராக பொறுப்பேற்றபிறகு அன்பழகன் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "திருச்சி மாநகராட்சியை குப்பையில்லாத மாநகராட்சியாக்குவேன்... சென்னைக்கு அடுத்த பெரு நகரமாக திருச்சி மாநகரத்தை உருவாக்க வேண்டும் என்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் நேருவின் கனவை நிறைவேற்ற பாடுபடுவேன். பராம்பரிய சிறப்புமிக்க திருச்சி மாநகராட்சியின் மாமன்ற கூட்டங்களை, கட்டுப்பாட்டுடன் கண்ணியமாக நடத்துவேன்" என்றார்.












Click it and Unblock the Notifications