சமயபுரம் மாரியம்மன் கோயிலில் என்னங்க இதெல்லாம்? குளத்துல அதுபாட்டுக்கு மிதக்குது.. குபுகுபு திருச்சி
திருச்சி: திருச்சி சமயபுரம் கோயிலுக்கு வழிபட வந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.. நாளை அமாவாசை வருவதையொட்டி கோவிலில் கூட்டம் அதிகம் காணப்பட்டு வரும்நிலையில், இப்படியொரு சம்பவம் கோயிலில் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்திலுள்ள அம்மன் கோயில்களிலேயே மிகவும் புகழ்வாய்ந்ததாகும்.. அதனால்தான், தமிழகம் மட்டுமல்லாது, பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் சமயபுரத்துக்கு வந்து தரிசனம் செய்து, தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி வருகிறார்கள்.

இதனால் சமயபுரம் கோவிலில் எப்போதும் கூட்டம் அலைமோதிக்கொண்டே இருக்கும்.. இந்த கோவிலுக்கு உரிய தெப்பக்குளம், கோவிலிலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ளது..
கோயில் குளம்: இந்த குழத்தில் ஆழம் அதிகம் என்பார்கள்.. அதனால்தான், பக்தர்களை இந்த குளத்தில் குளிக்க அனுமதிக்கப்படுவதில்லை.. குளத்தில் இறங்கி குளிக்க வேண்டாம் என்று கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு எச்சரிக்கை பலகையும் அங்கு வைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், இந்த தெப்பக்குளத்தில் பக்தர்கள் அக்னிசட்டி, அலகு குத்தி, பால்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்று அம்மனை தரிசிப்பது வழக்கமாகும். இந்த தெப்பக்குளத்தில்தான் தெப்ப உற்சவமும் நடைபெறும்.
போலீசாருக்கு தகவல்: இந்நிலையில் இந்த தெப்பக்குளத்தில் சடலம் ஒன்று மிதப்பதாக சமயபுரம் போலீசாருக்கு தகவல் கிடைக்கவும், உடனடியாக போலீசார் விரைந்து சென்றனர்.. அப்போது காக்கி சட்டை பனியன் அணிந்த, ஆணின் சடலம் மிதந்து கொண்டிருந்தது.
இதையடுத்து, தெப்பகுளத்தை சுற்றி சோதனை மேற்கொண்டபோது, உள்ளாடை மட்டுமே அணிந்த நிலையில் இன்னொரு ஒரு ஆணின் சடலம் தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் 2 சடலங்களையும் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணை: ஆனால், இவர்கள் யார் என்று தெரியவில்லை.. குளத்தில் குளிக்க வந்தவர்களா? அல்லது தற்கொலை செய்து கொள்ள வந்தார்களா? கொலையா? என்பது உறுதியாக தெரியவில்லை.. எனவே சமயபுரம் போலீசார் தீவிர விசாரணையை துவங்கியிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications