பணியில் சேர்ந்த 20 நாட்களில்... வழிப்பறி கொள்ளைக் கும்பலை கூண்டோடு தூக்கிய பெண் காவல் ஆய்வாளர்!
திருச்சி: திருச்சியில் காவல் ஆய்வாளராக பொறுப்பேற்று 20 நாட்களுக்குள் வழிப்பறிக் கொள்ளை கும்பலை கூண்டோடு கைது செய்து அவர்களிடம் இருந்து பல சவரன் நகைகளை பறிமுதல் செய்திருக்கிறார் பெண் காவல் ஆய்வாளர் ஷியாமளா.
திருச்சியில் காவல்துறையினருக்கு சவால் விடுக்கும் வகையில் செயின் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்திருக்கிறது.
இதையடுத்து கொள்ளையர்களைப் பிடிக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இதையடுத்து கண்டோன்மென்ட் உதவி காவல் ஆணையர் அஜய்தங்கம் தலைமையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

பெண் இன்ஸ்பெக்டர்
இந்தநிலையில் கடந்த 18-ம் தேதி செசன்ஸ் கோர்ட் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஷியாமளா தேவிக்கு வழிப்பறிக் கும்பல் குறித்த ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து திருச்சி மாநகர காவல் இணை ஆணையர் முத்தரசன் மற்றும் உதவி ஆணையர் அஜய் தங்கம் ஆகியோரது கவனத்துக்கு விவரத்தை கொண்டு சென்ற பெண் காவல் ஆய்வாளர் ஷியமளா, அவர்கள் கொடுத்த யோசனைப்படி திருச்சி -திண்டுக்கல் சாலையில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தியுள்ளார்.

முன்னுக்கு பின் முரண்
அப்போது திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த பதிவித்ரன் காவல்துறையினரை கண்டதும் தனது இரு சக்கர வாகனத்தை பின்னால் திருப்பியிருக்கிறார். இதைப்பார்த்த பெண் காவல் ஆய்வாளர் ஷியாமளா உட்பட தனிப்படை காவலர்கள் சினிமா பாணியில் விரட்டிச் சென்று அந்த நபரை பிடித்து விசாரித்துள்ளனர். முதலில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறி அங்கிருந்த தப்பிச் செல்ல முயன்ற அந்த நபர் பிறகு ஒரு கட்டத்தில் மளமளவென அனைத்து உண்மைகளையும் ஒப்பித்திருக்கிறார்.

நகைகளை உருக்கி
பவித்ரன் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருச்சியில் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த பொள்ளாச்சியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரையும் கைது செய்த போலீஸார், இவர்களுடன் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகின்றனர். இதனிடையே திருட்டு நகைகளை கோவைக்கு கொண்டு சென்று விற்று விடுவோம் என்றும் திருட்டு நகைகளை வாங்கி உருக்கிவிடுவார்கள் எனவும் கூறியிருக்கின்றனர்.

வழிப்பறிக் கொள்ளை
இதையடுத்து அவர்கள் கூறிய இடத்திற்கே தனிப்படை காவலர்களுடன் சென்ற பெண் காவல் ஆய்வாளர் ஷியம்ளா உருக்கிய நகைகளை மீட்டதுடன் திருட்டு நகைகளை வாங்கிய நபரை கைது செய்தார். மீட்கப்பட்ட நகையின் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே திருச்சியில் செயின் பறிப்பு உள்ளிட்ட வழிப்பறிக் கொள்ளை கும்பலை முற்றிலும் ஒடுக்கும் வகையில் மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.












Click it and Unblock the Notifications