திருச்சியில் விஜய் பிரச்சாரம்.. தவெகவுக்கு காவல்துறை விதித்த 23 கட்டுப்பாடுகள் என்ன? முழு விவரம்!
திருச்சி: தவெக தலைவர் விஜய் திருச்சியில் மேற்கொள்ள உள்ள பிரச்சாரத்திற்கு காவல்துறை தரப்பில் 23 நிபந்தனைகள் விதிக்கப்பட்ட நிலையில், அதனை ஏற்றுக் கொள்வதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்திற்கு விதிக்கப்பட்ட 23 நிபந்தனைகளின் விவரம் குறித்து தெரிய வந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சி மரக்கடையில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்த விஜய், அதன்பின் விஜய் பொதுவெளியில் வரவே இல்லை. இதனால் விஜய்யின் கள அரசியல் திருச்சியில் இருந்து தொடங்குவதாக பார்க்கப்படுகிறது.

இதனால் தவெகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். திருச்சியில் விஜய்க்கு திருப்புமுனை ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே விஜய்யின் பிரச்சாரத்திற்கு காவல்துறை தரப்பில் 23 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. தற்போது காவல்துறையின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாக தவெக நிர்வாகிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
இதனால் திட்டமிட்டபடி சனிக்கிழமை விஜய்யின் பிரச்சாரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவல்துறையின் 23 நிபந்தனைகள் குறித்த விவரம் தெரிய வந்துள்ளது. அதன்படி, திருச்சியில் விஜய் பிரச்சாரம் செய்யும் இடம் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வணிகப் பகுதி என்பதால், காலை 10.35 மணி முதல் 11 மணி வரை நடக்கும் பரப்புரைக்கு கட்சியினர் காலை 9.35 மணிக்குள் வர வேண்டும்.
தவெக தலைவர் விஜய் எந்தப் பகுதியிலும் ரோடு ஷோ, வரவேற்பு நிகழ்ச்சி நடத்தக் கூடாது. அதேபோல் விஜய்யின் வாகனத்திற்கு பின்னால் 5 வாகனங்களுக்கு மேல் எந்தவொரு வாகனமும் அனுமதிக்கப்படாது. முன்னும் பின்னும் தவெகவினர் ஊர்வலமாக வரக் கூடாது. பட்டாசுகள் வெடிக்க அனுமதியில்லை. எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் வைத்திருக்க கூடாது. இசைக்குழு பயன்படுத்தக் கூடாது.
பரப்புரையின் போது வரக் கூடிய வாகனங்களுக்கு உண்டான பார்க்கிங் வசதிகள் தாங்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். அதேபோல் காவல்துறை அனுமதிக்கும் வழித்தடத்தில் மட்டுமே பரப்புரைக்கு வருபவர்கள் வர வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் வருவதை தவிர்த்திட வேண்டும்.
விஜய் பரப்புரையின் போது கலந்து கொள்ளும் எவரும் கம்பு, குச்சி, பிற ஆயுதங்கள் எதையும் வைத்திருத்தல் கூடாது. பொதுமக்களுக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் இடையூறு ஏற்படாத வகையில் நடத்தப்பட வேண்டும். மருத்துவ வசதி, குடிநீர், முதல் உதவி சாதகங்கள், ஆம்புலன்ஸ் வசதி, தீயணைப்பு சாதங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்.
காவல்துறைக்கு உதவியாக தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். பிறர்மனம் புண்படும் வகையிலோ, பிற ஜாதி, மதத்தினரை புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. அதேபோல் பெட்டி வடிவ ஒலிபெருக்கியை மட்டுமே பயன்படுத்த சேண்டும். கூம்பு வடிவ குழாயை கட்டாயம் பயன்படுத்தக் கூடாது.
மாவட்டம் வாரியாக யார் தலைமையில் எத்தனை வாகனங்களில், எத்தனை தொண்டர்கள் வருவார்கள் என்ற விவரமும், தலைமை தாங்கி அழைத்து வரும் பிரதிநிதிகள் தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களும் முன்னதாகவே அளிக்கப்பட வேண்டும். பொது சொத்துக்கோ, தனியார் சொத்துக்கோ, சேதம் ஏற்படுத்தக் கூடாது. சேதம் ஏற்படுத்தினால், சூழ்நிலைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்டம் ஒழுங்கு நிலை நிறுத்தப்படும்.
அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், மின் விளக்கு கம்பங்காள், மின் மாற்றிகள், வாகனங்கள், கொடிக் கம்பங்கள், சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிரில் கம்பிகள் மீது ஏறிக் கொண்டு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. பரப்புரை முடிந்தவுடன் அமைதியான முறையில் கலைந்து செல்ல வேண்டும். பிளக்ஸ் பேனரோ, அலங்கார வளைவுகளோ, கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்க கூடாது.
பரப்புரையில் அனைவரும் காவல்துறை விதிகளுக்கு உட்பட்டே நடந்து கொள்ள வேண்டும். பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், பள்ளி மஆணவர்களும், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகளுக்கும் போக்குவரத்து இடையூறு ஏற்படா வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும். பொதுப்போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படா வண்ணம் நடந்து கொள்ள வேண்டும்.
ஆன்பிலன்ஸில் சென்று வர எவ்வித தடங்கலும் ஏற்படுத்தக் கூடாது. மேலே கூறப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகள் மற்றும் காவல் அதிகாரிகளால் அவ்வப்போது வழங்கப்படும் அறிவுரைகளையும் பின்பற்றி நடப்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்ய வேண்டும். நிபந்தனைகளில் எவையேனும் மீறப்படும் பட்சத்தில் பரப்புரையை இடையிலேயே நிறுத்துவதற்கு காவல்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications