1000 ஸ்கூலுக்கு 25 லட்சம் லஞ்சம்.. அடுத்த டார்கெட் அன்பில் மகேஷ்? சிக்கலில் திமுக.. ஆக்ஷனில் தவெக!
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் தடையில்லா சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள், முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் வெளிப்படையாக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் திமுக தலைமைக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பல தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் தடையில்லா சான்றிதழ்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கூட்டமைப்பின் நிர்வாகிகள் பேசிய கருத்துகள் தான் பிரச்சனைக்கு காரணம்.

இதுதொடர்பாக பேசிய அவர்கள், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெறுவதற்கும், தடையில்லா சான்றிதழ்களை பெறுவதற்கும் பெருமளவில் பணம் செலவழிக்க வேண்டிய நிலை இருந்ததாக கூறப்படுகிறது.
பள்ளி அங்கீகாரம்
சில பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் பல லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாகவும். ஆனால் தற்போதைய ஆட்சியில் எந்தவித கூடுதல் செலவும் இன்றி உரிய ஆவணங்களின் அடிப்படையில் அனுமதிகள் வழங்கப்பட்டதாகவும் அவர்கள் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விவகாரம் வெளியே வந்ததும், கடந்த ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறையில் நடைபெற்றதாக கூறப்படும் நிர்வாக முறைகேடுகள் குறித்து மீண்டும் விவாதம் தொடங்கியுள்ளது.
தனியார் பள்ளி
குறிப்பாக, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறையில் இடைத்தரகர்கள் செயல்பட்டதாகவும், சில முக்கிய நபர்கள் மூலம் வசூல் நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்களில் இருந்து வெளியாகும் தகவல்களின்படி, ஆசிரியர் பணியிட மாறுதல், ஸ்மார்ட் வகுப்பறை திட்டங்கள், தனியார் பள்ளி அங்கீகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளில் முறைகேடுகள் நடந்ததாக ஏற்கனவே புகார்கள் எழுந்திருந்தன. அவற்றில் சில தற்போது மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
பள்ளி நிர்வாகிகள்
குறிப்பாக, அங்கீகாரம் பெற விண்ணப்பித்த பல பள்ளிகளின் கோப்புகள் நீண்ட காலமாக நிலுவையில் வைக்கப்பட்டதாகவும், தேவையான ஆவணங்கள் இருந்தும் அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில்தான், தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் வெளிப்படையாக கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அன்பில் மகேஷ்
அவர்களின் புகார்களை அடிப்படையாக கொண்டு, சம்பந்தப்பட்ட விவகாரங்கள் குறித்து மேலதிக ஆய்வு மேற்கொள்ளப்படலாம் என்ற தகவலும் பரவி வருகிறது. அரசு தரப்பில், பள்ளிக்கல்வித் துறையில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து தகவல்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தனியார் பள்ளிகளின் அங்கீகார கோப்புகள், அவை நிலுவையில் இருந்த காலம், அனுமதி வழங்கப்பட்ட விதம் உள்ளிட்ட அம்சங்கள் ஆய்வு செய்யப்படலாம் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லஞ்ச ஒழிப்புத் துறை
மேலும், தனியார் பள்ளிகள் சார்பில் முறையான புகார்கள் அளிக்கப்பட்டால், அவற்றை விசாரிக்க தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, லஞ்ச ஒழிப்புத் துறையின் கவனத்திற்கும் சில தகவல்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.
ஆளும் தரப்பு
குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதா, விசாரணை எந்த அளவுக்கு செல்லும், உண்மையில் முறைகேடுகள் நடந்ததா என்பது குறித்து அரசு தான் விசாரிக்க வேண்டும் என்கின்றனர் திமுகவினர். ஆனால், பள்ளி நிர்வாகிகளே சொல்லி விட்ட பிறகு இதில் சந்தேகத்திற்கே இடமில்லை என்கின்றனர் தவெகவினர்.
அதேநேரத்தில், தனியார் பள்ளிகள் அங்கீகார விவகாரம் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில் கல்வித்துறையில் ஊழல் நடந்ததாக ஆளும் தரப்பு குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த விவகாரம் எதிர்வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications