சுஜித்தை மீட்க பஞ்சாபில் இருந்து வரும் நிபுணர்கள்... தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.ஏற்பாடு
Recommended Video
திருச்சி: மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள 2 வயது குழந்தை சுஜித்தை மீட்பதற்காக பஞ்சாபில் இருந்து இரண்டு விவசாய தொழில்நுட்ப நிபுணர்கள் இன்று இரவு வருகின்றனர்.
மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவரும், நாகை எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி ஏற்பாட்டில் அவர்கள் இருவரும் விமானம் மூலம் திருச்சி வருகின்றனர்.
லண்டன் வாழ் தமிழர் பெரியார் அழகன் என்பவர் ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தையை மீட்பதில் நிபுணத்துவம் பெற்ற பஞ்சாப் விவசாய தொழில்நுட்ப வல்லுநர்கள் பற்றி தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.வை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

விடா முயற்சி
ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள 2 வயது குழந்தை சுஜித்தை மீட்பதற்கான அத்தனை வழிகளையும் தமிழக அரசு கையாண்டு வருகிறது. இந்நிலையில் அதற்கு மேலும் பக்கபலமாக பஞ்சாப்பை சேர்ந்த இரண்டு விவசாய தொழில்நுட்ப நிபுணர்களும் நடுக்காட்டுப்பட்டியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.

தகவல்
ஆழ்துளை கிணறுகளில் சிக்கும் குழந்தைகளை மீட்பதில் அனுபவம் மிக்க ஹர்விந்தர் சிங், குரீந்தர் சிங் பற்றி லண்டன் வாழ் தமிழர் பெரியார் அழகன் என்பவர் நாகை எம்.எல்.ஏ.தமிமுன் அன்சாரியை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.

பறந்து வருகை
இதையடுத்து அவர்களின் விவரத்தை சேகரித்த தமிமுன் அன்சாரி, இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின்னர் அவர்கள் இருவரையும் பஞ்சாப்பில் இருந்து ஹைதராபாத், அதன் பின்னர் ஹைதராபாத்திலிருந்து திருச்சிக்கு வந்து சேரும் வகையில் விமான டிக்கெட் பதியப்பட்டு அவர்களுக்கு அனுப்பப்பட்டது.

நம்பிக்கை
பஞ்சாப்பில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்ட குரீந்தர் சிங், ஹர்விந்தர் சிங் என்ற இரண்டு விவசாய தொழில்நுட்ப வல்லுநர்களும் இரவு 11.30 மணிக்கு திருச்சி வந்து சேர்கிறார்கள். அவர்களை அங்கிருந்து நடுக்காட்டுப்பட்டிக்கு அழைத்துச்செல்ல வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications