கரூர் துயர சம்பவத்துக்கு விஜய் தான் தார்மீக பொறுப்பேற்க வேண்டும்.. டிடிவி தினகரன்
திருச்சி: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு விஜய் தான் தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலும் நியாயமான விஷயத்தை பேசினால் திமுகவுக்கு ஆதரவாக பேசியதாக கூறுகிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றாரா? என்றும் கேள்வி எழுப்பினார். கரூர் சம்பவத்தை வைத்து தவெகவுடன் அதிமுக கூட்டணி வைக்க பார்க்கிறது என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
திருச்சியில் இன்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு விஜய் தான் தார்மீக பொறுப்பேற்க வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றாரா?, எடப்பாடி பழனிசாமி இதை வைத்து அரசியல் செய்ய பார்க்கிறார். உயிரிழப்பு நடந்த நேரத்தில் நரித்தனமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
விஜய் கைது செய்யப்பட்டால் அது மற்றவர்களையும் பாதிக்கும். அது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் சரியாகவே செயல்படுகிறார். விஜய்யை கைது செய்தால் அது மற்ற கட்சிகளையும் பாதிக்கும்.
நான் நியாயமான விஷயத்தை பேசினால் திமுகவுக்கு ஆதரவாக பேசியதாக கூறுகிறார்கள். கரூர் சம்பவத்தை வைத்து தவெகவுடன் அதிமுக கூட்டணி வைக்க பார்க்கிறது. தவெகவை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்காக கரூர் சம்பவத்தில் திமுகவை குறை சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி.
2026 சட்டமன்ற தேர்தலில் பழனிசாமியின் துரோகத்தை வீழ்த்துவோம். இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவும். அமமுக இடம்பெறும் கூட்டணியே வெற்றி பெறும். யாருடன் கூட்டணி என்பதை கூடிய விரைவில் சொல்வோம். பழனிசாமியை தவிர, ராமசாமி, குப்புசாமி என யார் வேண்டுமானாலும் முதல்வராக வரலாம். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications