Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெருங்கும் தேர்தல் முடிவு.. வாக்கு எண்ணும் மையங்கள் வெப் கேமரா மூலம் தீவிர கண்காணிப்பு!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் வாக்குஎண்ணும் மையம் 'வெப் கேமரா'க்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

திருச்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் கடந்த மாதம் 18-ந் தேதி நடந்தது. ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை என 6 சட்டமன்ற தொகுதிகள் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குள் அடங்கி உள்ளது. அ.தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளர் டாக்டர் இளங்கோவனும், தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக திருநாவுக்கரசரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக சாருபாலா தொண்டைமான் மற்றும் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி உள்பட சுயேச்சைகள் என 24 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

voting machines are supervising by Web cameras

25-வது இடத்தில் 'எந்த வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க விரும்பவில்லை' என்பதை குறிக்கும் 'நோட்டா' இடம் பெற்றுள்ளது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 15 லட்சத்து 8 ஆயிரத்து 329. இவர்களில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 39 ஆயிரத்து 241. பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 68 ஆயிரத்து 940. மூன்றாம் பாலினம்(திருநங்கைகள்) 148 பேர். இவர்களில் மொத்தம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 37 ஆயிரத்து 750 பேர் ஆவர். வாக்களித்த ஆண் வாக்காளர்கள் 5 லட்சத்து 10 ஆயிரத்து 355. பெண் வாக்காளர்கள் 5 லட்சத்து 27 ஆயிரத்து 325. திருநங்கைகள்-70. பதிவான மொத்த வாக்குகள் சதவீதம் 68.80 ஆகும்.

இதுதவிர திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ராணுவத்தில் பணிபுரிபவர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், போலீசார் போன்றவர்களுக்கு தபால் ஓட்டு அளிக்கப்பட்டு இருந்தது. மொத்தம் 6,911 தபால் ஓட்டுகள் சிறப்பு மையம் மற்றும் அஞ்சல் துறையின் மூலம் பதிவாகி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான திருச்சி பஞ்சப்பூரில் உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரியில் உள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூட்டி 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. அங்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். கட்டிடம் முழுமையும் சி.சி.டி.வி. கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மின்னணு வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறைகள் மற்றும் கட்டிடங்கள் 'வெப் கேமராக்கள்' மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இரவு கல்லூரி முழுமையும் மின்விளக்குகள் எரியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வருகிற 23-ந் தேதி காலை 8 மணிக்கு ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்குகிறது. அங்கு சட்டமன்ற வாரியாக ஒவ்வொரு சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும்.

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு 25 சுற்றுகளாகவும், திருச்சி (மேற்கு) சட்டமன்ற தொகுதிக்கு 20 சுற்றுகளும், திருச்சி (கிழக்கு) சட்டமன்ற தொகுதிக்கு 19 சுற்றுகளும், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு 21 சுற்றுகளும், கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்கு 17 சுற்றுகளும், புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு 19 சுற்றுகளாகவும் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு விவரங்கள் அறிவிக்கப்படுகிறது.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை 24 வேட்பாளர்கள் களத்தில் நின்றாலும், 3 வேட்பாளர்களுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. அது காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசர், தே.மு.தி.க. வேட்பாளர் டாக்டர் இளங்கோவன். அடுத்ததாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்.

திருநாவுக்கரசர் திருச்சி தொகுதியை சாராதவராக இருந்தாலும் எல்லோருக்கும் அவர் பரீட்சயம் ஆனவர். அவர் தமிழக அமைச்சராகவும், மத்திய மந்திரியாகவும், எம்.எல்.ஏ. ஆகவும் இருந்தவர். பல கட்சிகள் தாவி, தற்போது காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவராக இருந்தவர்.

சாருபாலா தொண்டைமான் திருச்சியை சேர்ந்தவர். திருச்சி மாநகராட்சி மேயராக பணியாற்றியவர் என்பதால் மாநகர மக்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர். கட்சிக்கு சின்னம் கிடைக்கும் முன்பே, வீதி வீதியாக சென்று, 'உங்கள் சாருபாலா'-வுக்கு ஓட்டு போடுங்கள் என்று உரிமையுடன் பொதுமக்களிடம் வாக்கு கேட்டவர். அடுத்து, தே.மு.தி.க. வேட்பாளர் டாக்டர் இளங்கோவன், திருச்சிக்கு புதியவர். ஆனாலும், ஆளுங்கட்சி கூட்டணி சார்பில் களம் இறக்கப்பட்டதால் அவரும் நம்பிக்கையுடன் கூட்டணி கட்சியினர் துணையுடன் வாக்குகளை சேகரித்தவர். தேர்தல் முடிந்த பின்னர், வேட்பாளர்கள் திருநாவுக்கரசர், டாக்டர் இளங்கோவன் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

வருகிற 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை. அதற்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. எனவே, வெற்றி வாய்ப்பு யாருக்கு? என்பது 23-ந் தேதி காலை 10 மணிக்குள், வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரங்களை வைத்தே கணித்து விட முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+