அன்பில் மகேஷ் Vs கே.என்.நேரு; திருச்சி மேயர் வேட்பாளர் யார்? களேபரத்துக்கு மத்தியில் காங். தூது!
திருச்சி: திருச்சி மேயர் வேட்பாளர் ரேஸில் அமைச்சர்கள் கே.என்.நேருவும், அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் சமபலத்துடன் மோதி வருவதால் யாருடைய ஆதரவாளருக்கு சீட் கிடைக்கும் என்ற விவாதம் திருச்சி உடன்பிறப்புகள் மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிறது.
முன்னாள் துணை மேயரும் தனது தீவிர விசுவாசியுமான அன்பழகனை மேயராக்க அமைச்சர் கே.என்.நேரு அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்.
இதற்கு சற்றும் சளைக்காத அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தரப்பு மலைக்கோட்டை பகுதி செயலாளரான மதிவாணன் அல்லது கே.என்.சேகரனை திருச்சி மேயராக்க முனைப்பு காட்டி வருகிறது.

திருச்சி மாவட்டம்
தமிழகத்தின் மத்திய பகுதியில் அமைந்திருந்திக்கும் திருச்சிக்கும் திமுகவுக்கும் விவரிக்க முடியாத ஒரு பந்தம் இருந்துக் கொண்டே வருகிறது. தீரர்களின் கோட்டமாம் திருச்சி என்று தான் கருணாநிதியே குறிப்பிடுவார். அந்தளவுக்கு திமுகவுக்கு திருப்புமுனைகளை கொடுத்த பல மாநாடுகள் திருச்சியில் நடைபெற்றிருக்கின்றன. இதுமட்டுமல்லாமல் திமுகவுக்கான வாக்கு வங்கியும் திருச்சி மண்டலத்தில் எப்போதுமே சரிந்ததில்லை.

திருச்சி ஸ்பெஷல்
இந்நிலையில் திருச்சிக்கு எப்போதுமே இரண்டு அமைச்சர்களை கொடுத்து அழகு பார்ப்பார் கருணாநிதி. அப்படித்தான் திருச்சி செல்வராஜுக்கும், கே.என்.நேருவுக்கும் அமைச்சர் பதவி கொடுத்து கட்சியை திருச்சி மாவட்டத்தில் துடிப்புடன் செயல்பட வைத்தார் அவர். இப்போது ஸ்டாலினும் கருணாநிதி பாணியில் திருச்சி மாவட்டத்துக்கு இரண்டு அமைச்சர்களை கொடுத்திருக்கிறார். கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய இரண்டு அமைச்சர்களுமே ஸ்டாலினுக்கு ஸ்பெஷல் தான்.

சம பலம்
இதில் அவரை விட இவர் பெரியவர், இவரை விட அவர் பெரியவர் என ஸ்டாலின் நினைக்க முடியாத அளவுக்கு நேருவும், அன்பில் மகேஷும் திகழ்கிறார்கள். இது இரண்டு அமைச்சர்கள் உள்ள மற்ற மாவட்டங்களுக்கு பொருந்துமா என்றால் கிடையாது. இந்தச் சூழலில் எதிர்வரும் மாநகராட்சி தேர்தலில் திருச்சி மேயர் வேட்பாளராக தங்களது ஆதரவாளர்களை நிறுத்த அமைச்சர்கள் நேருவும், அன்பில் மகேஷும் தலைமையிடம் முயற்சித்து வருகின்றனர்.

யாருக்கு வாய்ப்பு
இரண்டு பேருமே தனக்கு மிகவும் வேண்டப்பட்டவர்கள் என்பதால் திருச்சி மேயர் வேட்பாளர் தேர்வில் என்ன முடிவெடுப்பது எனத் தெரியாமல் முதலமைச்சர் ஸ்டாலின் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே கே.என்.நேரு கோட்டாவில் திருச்சி முன்னாள் துணை மேயர் அன்பழகனுக்கு வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் பதவியை எதிர்பார்த்த அன்பழகன், அது கிடைக்காமல் போனதால் ஏமாற்றத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் தூது
இதேபோல் அமைச்சர் அன்பில் மகேஷ் கோட்டாவில் மலைக்கோட்டை பகுதிச்செயலாளர் மதிவாணன் அல்லது திருவெறும்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு அதிகம் எனக் கூறப்படுகிறது. இத்தனை அரசியல் களேபரங்களுக்கு மத்தியில் காங்கிரஸ் திருச்சி மேயர் பதவியை எதிர்பார்த்து தூது விடும் படலத்தை தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எத்தனை தூதுகள் வந்தாலும் இந்த முறை திருச்சியில் திமுக தான் மேயர் பதவிக்கு போட்டியிடும் என உறுதிக்கூறுகிறார்கள் மலைக்கோட்டை மாநகர் உடன்பிறப்புகள்.












Click it and Unblock the Notifications