திருச்சி என்ஐடி மாணவி தற்கொலை ஏன்.. போலீஸ் விசாரணையில் வந்த பரபரப்பு தகவல்!
திருச்சி: திருச்சி என்ஐடி ஹாஸ்டலில் ஆந்திர மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் என்ன நடந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா பான்குடி பகுதியைச் சேர்ந்தவர் சவுமியா தேவி. இவர் திருச்சி திருவெறும்பூர் அருகிலுள்ள என்ஐடியில் பிடெக் சிவில் இன்ஜினியரிங் 2ஆம் ஆண்டு படித்து வந்தார்.
இவருடன் திருவாரூரைச் சேர்ந்த தீட்சனா என்ற மாணவியும் சவுமியாவுடன் ஒரே அறையில் தங்கியிருந்தார். இந்த நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டையொட்டி தீட்சனா திருச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.

உறவினர் வீடு
உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு தீட்சனா ஹாஸ்டலுக்கு திரும்பி வந்தார். அறைக்கு சென்ற போது அவரது அறையின் கதவை தட்டினார். உள்புறமாக தாழிடப்பட்டிருந்த அறையின் கதவு வெகு நேரமாக திறக்கப்படவில்லை. இதையடுத்து பக்கத்து அறையில் இருந்த தோழிகளின் உதவியுடன் கதவை உடைத்தனர்.

அதிர்ச்சி
உள்ளே போய் பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சவுமியா தேவி அறையிலிருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார். இதுகுறித்து அங்கிருந்த மாணவிகள் ஹாஸ்டல் வார்டனுக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் தகவல் கொடுத்தனர்.

துவாக்குடி போலீஸார்
இதனிடையே துவாக்குடி போலீஸாரும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து சவுமியா தேவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் ஹைதராபாத்தில் படிக்கும் போது சவுமியா ஒருவரை காதலித்து வந்ததாகவும் அந்த காதல் விவகாரத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டு அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் தெரியவந்தது.

தீட்சனா
தீட்சனாவிடம் விசாரணை நடத்தியதில் சவுமியாவின் காதலனுடன் அவர் கடைசியாக பேசியிருந்தார். அப்போது அவர்களுக்குள் ஏதோ தகராறு ஏற்பட்டு இருவருமே போன் இணைப்பை துண்டித்துவிட்டனர். இந்த நிலையில் மனம் கேட்காமல் சவுமியாவிற்கு காதலன் மீண்டும் போன் செய்துள்ளார்.

காதலனிடம் விசாரணை
ஆனால் அவர் எடுக்கவில்லை. இதனால் ரூம் மேட்டான தீட்சனாவிற்கு சவுமியா காதலன் போன் செய்து விஷயத்தை கூறியுள்ளார். இதையடுத்து உறவினர் வீட்டிலிருந்து தீட்சனா அவசர அவசரமாக அறைக்குச் சென்றுள்ளது தெரியவந்தது. போலீஸார் சவுமியாவின் காதலனிடம் விசாரணை நடத்தவுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications