திரிபுரா கலவரம்.. 2 பெண் செய்தியாளர்களுக்கு எதிராக விஷ்வ ஹிந்து பரிஷத் புகார்.. எப்ஐஆர் பதிவு!
அகர்தலா: திரிபுரா கலவரம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக இரண்டு பெண் செய்தியாளர்களுக்கு எதிராக எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கொடுத்த புகாரில் அடிப்படையில் இந்த எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் சமீபத்தில் துர்கா பூஜையின் போது பல்வேறு இடங்களில் இந்து கோவில்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. துர்கா பூஜைக்காக இந்துக்கள் அமைத்து இருந்த சிறப்பு பந்தல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதற்கு பதிலடியாக வங்கதேசத்தை ஒட்டி இருக்கும் இந்திய மாநிலங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
முக்கியமாக திரிபுராவில் பல்வேறு இடங்களில் இதற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டது. திரிபுராவில் பல இடங்களில் விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து ஜாக்ரான் மன்ச் உள்ளிட்ட இந்து அமைப்புகள் இதற்கு எதிராக கடந்த போராட்டம் நடத்தின. இதில் இஸ்லாமியர்கள் இருக்கும் கடைகள் மீது, மசூதிகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வந்தன. இதை திரிபுராவில் பெரிய கலவரத்தை உண்டாக்கியது.

கலவரம்
இந்த கலவரத்தை தொடர்ந்து மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் இந்து, இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தின. கடந்த வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின் இஸ்லாமிய அமைப்புகள் மகாராஷ்டிராவில் இருக்கும் அமராவதியில் போராட்டம் நடத்தின. இதை தொடர்ந்து நேற்று அமராவதியில் மீண்டும் விஸ்வ இந்து பரிஷத் போன்ற இந்து அமைப்புகள் நேற்று பதில் போராட்டம் நடத்தின.

போராட்டம்
இரண்டு போராட்டங்களிலும் கல்லெறி தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் அமராவதி, மலேகான் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் திரிபுரா கலவரம் குறித்து செய்தி வெளியிட்டதாக இரண்டு பெண் செய்தியாளர்களுக்கு எதிராக எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கொடுத்த புகாரில் அடிப்படையில் இந்த எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது.

எப்ஐஆர்
சம்ரிதி சகுனியா, ஸ்வர்ணா ஜா ஆகிய இரண்டு செய்தியாளர்களுக்கு எதிராக விஸ்வ ஹிந்து பரிஷத் புகார் கொடுத்துள்ளது. இந்த நிலையில் போலீசார் தங்களை மிரட்டியதாக சம்ரிதி சகுனியா, ஸ்வர்ணா ஜா ஆகியோர் புகார் அளித்துள்ளனர். திரிபுரா கலவரம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக தங்களை போலீசார் ஹோட்டலில் வந்து மிரட்டியதாகவும், இதை பற்றி கூடுதல் விவரங்களை வெளியிடுவோம் என்றும் சம்ரிதி சகுனியா, ஸ்வர்ணா ஜா இருவரும் தெரிவித்துள்ளனர்.

இரண்டு செய்தியாளர்கள்
ஆனால் போலீசாரே தாங்கள் வெறும் நோட்டீஸ் மட்டுமே கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். இரண்டு தரப்பிற்கு எதிராக கலவரத்தை தூண்டும் வகையில் செய்தி வெளியிட்டதாக இவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இது பற்றி விசாரிக்கவே நாங்கள் நேரில் சென்றோம். சம்ரிதி சகுனியா, ஸ்வர்ணா ஜா ஆகியோரை நாங்கள் மிரட்டவில்லை. அவர்களிடம் நாங்கள் நேரில் சென்று நோட்டீஸ் வழங்கினோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications