100 ஆவது நாள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் தியாகம் வீண் போகவில்லை!
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை பார்க்கும் போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 13 பேரின் தியாகம் வீண் போகவில்லை என்றே கருதப்படுகிறது.
தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலைக் கழிவுகளால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு புற்றுநோய், குழந்தையின்மை, தோல் நோய் உள்ளிட்டவை ஏற்பட்டதாகவும் விவசாயம், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி அந்த ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் அவர்களின் போராட்டம் அதே ஆண்டு மே 22-ஆம் தேதி 100ஆவது நாளை எட்டியது. அப்போது தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்திற்கு அம்மக்கள் ஊர்வலகமாக புறப்பட்டனர்.

அறிக்கை
ஆட்சியரை சந்திக்க விரும்பியபோது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். இதையடுத்து மே 28 ல் காற்று, நீர் மாசு ஏற்படுத்தியதாக ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசும் உத்தரவிட்டது. அரசு உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

மக்களுக்கு பாதிப்பு
ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற தருண் அகர்வாலின் அறிக்கைப்படி ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதியளித்தது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதேபோல ஆலையை திறக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிர்வாகமும் மனுத்தாக்கல் செய்தது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை
உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை விதித்ததுடன், வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக, வேதாந்தா நிறுவனத்துக்கு அறிவுறுத்தியது. அதன்படி வேதாந்தா நிறுவனம் ஆலையை திறக்க அனுமதி கோரி கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தது.

மனு தள்ளுபடி
அந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இன்று வழங்கியது. அப்போது நீதிபதிகள் கூறுகையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது. அந்த ஆலைக்கு பூட்டி சீல் வைத்தது சரியே. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்றனர்.

மக்கள்
தங்கள் மண்ணின் வளத்திற்காகவும் தங்கள் மக்களின் நலத்திற்காகவும் 13 பேர் பலியாகியிருந்தனர். இந்த தீர்ப்பால் அந்த 13 பேரின் தியாகம் வீண் போகவில்லை என்பதால் அப்பகுதி மக்கள் இனிப்பு கொடுத்தும் பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த தீர்ப்பை ஆளும் கட்சி எதிர்க்கட்சி என அனைத்து தரப்பினரும் வரவேற்கிறார்கள்.












Click it and Unblock the Notifications