திருச்செந்தூர் கடலில் 2 பொக்கிஷம்.. 2 கைகளிலும் ருத்ராட்சத்துடன் வந்த உருவம்.. சிலிர்த்த பக்தர்கள்
தூத்துக்குடி: திருச்செந்தூர் கடற்கரையில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.. அதாவது, 20 அடி நீளத்திற்கு 10 அடி ஆழத்திற்கு கடலில் அரிப்பு ஏற்பட்டு, மிகப்பெரிய பள்ளம் உருவாகியிருப்பதால், பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். எனினும், இந்த கடல் அரிப்பால் சில பொக்கிஷங்களும் கிடைத்து வருகின்றன. இதுகுறித்த முக்கிய கோரிக்கையை பக்தர்கள் விடுத்தபடி உள்ளனர்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலானது, கடற்கரைக்கு அருகில் அமைந்திருக்கிறது. 15 வருடங்களுக்கு பிறகு, திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் விரைவில் கும்பாபிஷேகமும் நடக்க போகிறது.

பவுர்ணமி நாட்கள்: உலகளவில் புகழ்பெற்ற திருச்செந்தூர் கோயிலில், விசேஷ, விரத, விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சாதாரண நாட்களில் நூற்றுக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் பெற்று செல்வது வழக்கம். மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் இங்குள்ள கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வதும் இயல்பான ஒன்றாகும். அதிலும், பவுர்ணமி நாட்களில் கோயில் கடற்கரையில் இரவில் குடும்பத்தோடு தங்கி வழிபாடு செய்வார்கள்.
கோவில் கடற்கரை பகுதியில் கடந்த சில நாட்களாகவே கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், கோவில் முன்புள்ள கடற்கரையில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதாவது, 20 அடி நீளத்திற்கு 10 அடி ஆழத்திற்கு கடலில் அரிப்பு ஏற்பட்டு, மிகப்பெரிய பள்ளம் உருவாகியிருப்பதால், பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.
தமிழ் எழுத்து: எனினும், திருச்செந்தூர் கடற்கரையில் ஏற்படும் கடல் அரிப்பு காரணமாக வரலாற்று பொக்கிஷங்கள் கிடைக்கப்பெற்று வருகின்றன... கடந்த மாதம்கூட, நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை 500 மீட்டர் தூரத்திற்கு பச்சை படிந்த பாறைகள் வெளியே தெரிந்தது. அப்போது, ஒரு 4 அடி உயரம் கொண்ட பெரிய கல்வெட்டும் தென்பட்டுள்ளது. அந்த கல்வெட்டில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. ஆனால், தெளிவாக எழுத்து இல்லை.
அதனால், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை தலைவர் பேராசிரியர் சுதாகர் மற்றும் பேராசிரியர் மதிவாணன் ஆகியோர் கல்வெட்டில் மைதா மாவு தடவி பார்த்தபோது, "மாதா தீர்த்தம்" என தொடங்கி எழுதப்பட்டிருந்தது. மொத்தம் 15 வரிகள் அதில் பொறிக்கப்பட்டிருந்தன. பிறகு 4 அடி உயரம் கொண்ட கருங்கல் தூண் ஒன்றும் அங்கேயே கண்டுபிடிக்கப்பட்டடது. அந்த கல்வெட்டிலும் 17 வரிகள் பொறிக்கப்பட்டிருந்தன.
2 கல்வெட்டுகள்: இந்த 2 கல்வெட்டுகளுமே 100 வருடங்களுக்கு உள்பட்டது என்றும், நாழிக்கிணறு அருகே நல்ல தண்ணீர் கிடைக்கும் தீர்த்த கிணறுகள் இருந்ததை குறிக்கவே இப்படியான கல்வெட்டுகள் நடப்பட்டிருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கடற்கரை மண்ணில் புதைந்து கிடந்த 200 வருட பழமை வாய்ந்த முனிவர் சிலை ஒன்று தற்போது கிடைத்துள்ளது. கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக திருச்செந்தூரில் நீடித்து வரும் கடல் அரிப்பால், கிடைக்கப் பெற்றுள்ள முனிவர் சிலை மிகவும் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. 2 கைகளிலும் ருத்ராட்சம் கட்டப்பட்டு கம்பீரமாக அந்த முனிவர் சிலை காட்சியளிக்கிறது.. ஆனால், அந்த சிலை சேதமடைந்த நிலையில் உள்ளதாம்.
கோரிக்கை: அதே போல், அதன் அருகிலேயே இன்னொரு நாகர் சிலையும், பெண் உருவம் கொண்ட ஒரு அடி உயரமுள்ள மற்றொரு சிலையும் கிடைத்துள்ளது. இந்த பழமை வாய்ந்த சிலைகளை பக்தர்கள் வியப்புடன் பார்த்து சென்றபடி உள்ளனர்.. இதுபோல் தொடர்ந்து கடற்கரையில் கிடைக்கும் சிலைகளை பாதுகாக்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications