என்னப்பா போலாமா? கரும்பு ஜூஸ் பிழிய இன்ஜினியர் வேணுமாம்! சம்பளம் 18 ஆயிரமாம்.. வெறியான விஐபிகள்.!?
தூத்துக்குடி: அந்தக் காலத்தில் தெருவுக்கு ஒரு ராயல் என்ஃபீல்டு, ஊருக்கு ஒரு இன்ஜினியரிங் இருப்பார்கள். ஆனால் தற்போது தெருவுக்கு 10 இன்ஜினியர்களும், ஊருக்கு நூறு ராயல் என்பீல்டு பைக்களும் இருக்கிறது. இந்த நிலையில் வேலையில்லா பட்டதாரிகளை வெறுப்பேற்றும் விதமாக தூத்துக்குடி திருச்செந்தூர் அருகே வைக்கப்பட்டுள்ள ஒரு விளம்பர பேனர் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அப்படி என்னதான் இருக்கிறது? அந்த பேனரில் என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்..!
அந்த காலத்தில் படித்து பட்டம் பெற்றவர்கள் ஊருக்கு நான்கு பேர் இருந்தாலே பெரிய விஷயம். குறிப்பாக இன்ஜினியர், வக்கீல்கள் என்றால் மிகவும் பெருமையாக பேசுவார்கள். " இன்ஜினியர் வீடு தானே நேராக போய் அந்தப் பக்கம் திரும்புங்க.. பெரிய வீடு மஞ்ச கலர் பெயிண்ட் அடிச்சி இருக்கும்" என விலாவாரியாக விலாசம் சொல்லி தருவார்கள்.

ஆனால் நிலைமை இப்போது தலைகீழாக இருக்கிறது. நூற்றுக்கணக்கான பொறியியல் கல்லூரிகள் முளைத்துவிட்டன. புற்றீசல் போல முளைத்த கல்லூரிகளில் ஆண்டுக்கு லட்சக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் வெளி வருகின்றனர்.
ஆனால் அவர்களுக்கான வேலை வாய்ப்பு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. தற்போது லட்சக்கணக்கான பொறியியல் பட்டதாரிகளும் பெற பட்டங்கள் பெற்ற இளைஞர்களும் வேலை வாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர். இந்த நிலையில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். தங்களுக்கு தகுதிக்கேற்ப வேலை வேண்டும் அல்லது படித்த படிப்புக்கான வேலைக்கு தான் செல்வோம் என இளைஞர்கள் சிலர் அடம் பிடிப்பதையும் பார்க்க முடிகிறது.

வேலையில்லா பட்டதாரிகளை விஐபி என உசுப்பேற்றி விட்ட திரைப்படங்களும் நூற்றுக்கணக்கில் வெளிவந்திருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி இருக்கின்றனர். ஆனால் வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது. முன்னரே சொன்னது போல படித்த படிப்புக்கான வேலை கிடைத்தால் தான் செல்வோம் என இளைஞர்கள் கூறுகிறார்கள். இதையடுத்து பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் தமிழகத்தில் குவிந்து வருகின்றனர்.
ஹோட்டல் பணி துவங்கி கட்டுமான பணி வரை வடமாநில இளைஞர்கள் நிறைய வேலை வாய்ப்புகளை ஆக்கிரமித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் போஸ்டர் ஒன்று வேகமாக பகிரப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே மெஞ்ஞானபுரத்தில் கரும்பு ஜூஸ் விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர் ஒருவர் தனது கடைக்கு ஆட்கள் தேவை என பேனர் ஒன்றை வைத்துள்ளார்.
அதில்," கரும்பு ஜூஸ் பிழிய இளைஞர்கள் தேவை.. மாதம் 18,000 ஊதியம் வழங்கப்படும்.. பிஇ, பிஎஸ்சி, பிஏ படித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்" என அவரது தொலைபேசி எண்ணோடு பதிவிட்டு இருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இளைஞர்களிடையே எந்த வேலை கிடைத்தாலும் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே அவ்வாறு செய்திருப்பதாக கூடுகிறார் கடையின் உரிமையாளர். தற்போது இந்த புகைப்படத்தை என்னப்பா போலாமா? எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்க பாத்தியா? என மீம்ஸ்களாக பரப்பி வருகின்றனர் நெட்டிசன்கள். ஆனால் இந்த செய்தி பெற்றோர்கள் கண்ணில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்..












Click it and Unblock the Notifications