நடிகர் விஜய் அரசியலில் சாதிக்க முடியாது! எம்.ஜி.ஆருக்கு நிகரில்லை! சீண்டிய அதிமுக மாஜி அமைச்சர்!
தூத்துக்குடி: அரசியலுக்கு வந்த எத்தனையோ நடிகர்கள் இன்று இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் கூறியிருக்கிறார்.
கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வைத்துக்கொண்டு முதலமைச்சராகிவிடலாம் என்றால் அது முடியாது என நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு சண்முகநாதன் பதிலளித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த போது, நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் திராவிடக் கட்சிகளுக்கு பாதிப்பு வருமா என செய்தியாளர் ஒருவர் கேட்டார்.

இதற்கு பதிலளித்த சண்முகநாதன், நடிகர் விஜயகாந்த் அரசியலுக்கு வரும் போதும் இப்படித்தான் பாதிப்பு வரும் என்று சொன்னார்கள் ஆனால் இன்று அவர் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார் எனக் கூறினார்.
அதேபோல் நடிகர்கள் கமல்ஹாசன், சரத்குமார் என பலரும் அரசியலில் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார்கள் என்றும் ஏன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனாலேயே அரசியலில் சாதிக்க முடியவில்லை எனவும் தெரிவித்தார்.
எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது என்றும் எல்லா அமைப்புகளும் எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கமாகி விடமுடியாது எனவும் சண்முகநாதன் தெரிவித்திருக்கிறார்.
ரசிகர்கள் இருப்பதால் படங்கள் ஓடுவதாகவும் ஆனால் அதற்காக அரசியலுக்கு வந்து முதலமைச்சராகிவிடலாம் என்று நினைத்தால் அது நடக்காது எனவும் நடிகர் விஜய்யை சீண்டும் வகையில் சண்முகநாதன் பதிலளித்துள்ளார்.

இதனிடையே தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும் யார் வேண்டுமானாலும் எந்த பட்டியலை வேண்டுமானாலும் வெளியிடட்டும் என்று கூறிய சண்முகநாதன், அண்ணாமலையாக இருந்தாலும் சரி எவராக இருந்தாலும் சரி அதைப் பற்றியெல்லாம் தங்களுக்கு கவலையில்லை என கடைசியில் ஒரே போடாக போட்டார்.
அதிமுக -பாஜக கூட்டணி குறித்து அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய எடப்பாடி பழனிசாமி இன்னும் டெல்லியிலிருந்து சென்னையே திரும்பவில்லை. ஆனால் அதற்குள் அதிமுக மாவட்டச் செயலாளர் ஒருவர் அண்ணாமலையை விமர்சிக்கும் வகையில் பிரஸ்மீட் நடத்தியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications