6 மாதத்தில் தமிழகத்தின் முதல்வராவார் ஸ்டாலின்! திமுகவை நடத்துவார் உதயநிதி! அனிதா ராதாகிருஷ்ணன் பகீர்
தூத்துக்குடி: இன்னும் 6 மாத காலத்தில் தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் வருவார் என தூத்துக்குடியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் நடைபெற்றது. இதற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

அப்போது அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், வல்லநாட்டில் இந்த மண்டபம் கட்டப்பட்டு தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என சொல்லிய முத்துராமலிங்க தேவரின் இடத்தில் இந்த கூட்டம் நடைபெறுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நாம் தான் ஆட்சி செய்கிறோம் என்ற சிலர் நினைக்கிறார்கள், ஆனால் நம்மோடு சேர்ந்து உள்ளவர்கள் தான் விட்டுக் கொடுத்து அவர்களது ஆட்சியை தக்க வைத்துள்ளனர். ஆனால் ஏதோ கொக்கரிப்பது போல தலைவர்களை பற்றி கேவலமாக பேசுவது கழகத்தில் உள்ளவர்களை கைது செய்வது என மிரட்டி பார்க்கிறார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தை தொட்டு பார்க்க முடியுமா? இந்த நாட்டு மக்களுக்கு ஏதாவது நன்மை செய்தார்கள் என்று சொல்ல முடியுமா? யாருக்காவது உதவி செய்து இருக்கிறார்களா.? அவர் எந்த வகையில் முதலமைச்சராக வந்தார்? அவர் எம்ஜிஆரை குறிப்பிடுகிறார், எம்ஜிஆரும் விஜய்யும் ஒன்றா?
எம்ஜிஆர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் கடுமையாக உழைத்து எம்ஜிஆர் மன்றத்தை உருவாக்கியிருக்கிறார். தற்போது விஜயா ஆட்சி நடத்துகிறார்.? லாட்டரி வியாபாரி ஆதவ் அர்ஜுனா தான் ஆட்சியை நடத்துகிறார்.
எவ்வளவு நாட்கள் இந்த ஆட்சி நடைபெறும். நான் குறிப்பிட்டு சொல்கிறேன், 6 மாத காலத்திற்கு இந்த ஆட்சி போகவில்லை என்று சொன்னால் பார்ப்போம். 6 மாதத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் வருவார்கள். திருச்சி சிவா போன்றவர்கள் எல்லாம் மத்தியில் அமைச்சராக அமர்வார்கள். உதயநிதி கட்சியை நடத்துவார், அந்த காலம் வரும்!
எம்ஜிஆரை பற்றி பேசுவதற்கு விஜய்க்கு என்ன அருகதை இருக்கிறது. எப்பேர்ப்பட்ட தலைவரா இருந்தவர் எம்ஜிஆர்.? அண்ணாவால் பாராட்டப்பட்டார். கருணாநிதியால் வளர்த்தெடுக்கப்பட்டவர் எம்ஜிஆர்.
என்னை ஜெயிலில் பிடித்து போட்டால் எல்லாம் முடிந்து விட்டது என்று அர்த்தமா.? செந்தில் பாலாஜியால் இடைத்தேர்தல்களில் குழப்பம் ஏற்படும் என்று அவர் மீது போட்ட வழக்கு என்னாச்சு? "நீங்க எம்எல்ஏ பதவிய ராஜினாமா செய்யுங்கள் உங்களை மந்திரி ஆக்குவோம் என கூறினார்கள், அதற்கு நான் மந்திரியாவது கிந்திரி ஆவது என கூறிவிட்டு அதற்கு நான் சம்மதிக்கவில்லை. இவ்வாறு அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து திருச்சி சிவா எம்பி பேசுகையில், "எத்தனையோ நன்மைகள் செய்து திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் தொடர முடியவில்லை. வெற்றி தோல்வி என்பது இயல்பு. புதிதாக பொறுப்பேற்ற முதலமைச்சர் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை. அவரது செயல்பாடுகளும் கருத்துக்களும் செம்மையாக இல்லை என்பதே எங்களுக்கு வேதனை அளிக்கிறது.
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கவலை எல்லாம் நாம் தொடர்ந்து முதலமைச்சராக இருக்க முடியவில்லை என்பது அல்ல. தற்போது இருப்பவர்கள் சரியானவர்கள் இல்லை என்பதுதான். எங்கள் தலைவர் ஸ்டாலின் அரசியலுக்கு வந்து 50 ஆண்டுகாலம் ஆகிறது.
அரசியல் என்பது என்ன என்பதை தெரிந்து கொண்டு மக்கள் வரும் காலங்களில் யார் ஆட்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்பதை தெரிந்து வாக்களிக்க வேண்டும் என்பதை பேச வந்துள்ளேன். எம்ஜிஆர் பழைய படங்களில் கருப்பு சிவப்பு கொடியோடு இருந்திருக்கிறார். தேர்தல் பிரச்சாரங்களுக்கு வந்திருக்கிறார். கழக வளர்ச்சிக்காக நாடகங்களை நடத்தி இருக்கிறார்.
ஆனால் இன்றைய முதலமைச்சராக இருப்பவருக்கு அரசியல் அனுபவம் இல்லை. ஆட்சிக்கு வந்ததற்கு பின்னால் உங்களுடைய முதிர்ச்சி வெளிபட்டிருக்க வேண்டும் நாங்கள் மிகவும் பொறுமையாக இருக்கிறோம். ஏனென்றால் நாங்கள் பக்குவப்பட்டவர்கள். ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரைக்கும் காத்திருக்குமாம் கொக்கு, அது போல தான் நாங்கள் காத்திருக்கிறோம்.
குடிசையில் இருந்தவர்களை கோபுரத்திற்கு நாங்கள் உயர்த்தினோம். கோபுரத்தில் இருப்பவனுக்கு கோபம் வந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. தற்போது விடியல் பயணம் என்பதன் பெயரை மாற்றியுள்ளார்கள். நீங்கள் எந்த பெயரை வேண்டுமானாலும் மாற்றுங்கள் மக்கள் இதயத்தில் இருந்து பெயரை உங்களால் மாற்றவே முடியாது.
அடுத்தவர்களை பற்றி நான் பேசுவதும் இல்லை. என்னுடைய நேரத்தை வீணடிப்பதும் இல்லை. எங்களது திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொன்னாலே போதும். சூரியன் மாலையில் மறையும்போது இனி சூரியன் இல்லை என்று சிலர் நினைப்பார்கள், ஆனால் காலையில் உதயசூரியன் உதித்து வரும்போது அவர்களுக்கு தெரியும் சூரியனை ஒன்றும் செய்ய முடியாது என்று. இவ்வாறு திருச்சி சிவா பேசினார்.












Click it and Unblock the Notifications