கோயில் நகை கையாடல்; பாஜக பிரமுகர் தலைமறைவு; வலைவீசி தேடும் போலீஸ்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வீரமாணிக்கம் கோயில் நகையை கையாடல் செய்த புகாரில் பாஜக பிரமுகர் பட்டு ராமசுந்தரத்தை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்து சமயஅறநிலையத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் குரும்பூர் போலீஸார் பட்டு ராமசுந்தரம் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கையாடல் செய்யப்பட்ட நகையின் மதிப்பு 100 சவரன் இருக்கும் என ஒரு தரப்பினரும் 60 சவரன் இருக்கும் என மற்றொரு தரப்பினரும் கூறுவதால் அதில் குழப்பம் நீடித்து வருகிறது.
பள்ளிச் சிறுமியை சீரழித்த அழகு நிலைய கும்பல்: தாய், மகள் ஆண் நண்பர்கள் 2 பேர் கைது: 2 பேர் தலைமறைவு
தூத்துக்குடி மாவட்டம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே வீரமாணிக்கம் என்ற கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தில் வீர பத்ரகாளியம்மன் கோயில், சந்தி அம்மன் கோயில், சுடலை மாடன் சாமி கோயில் என 3 கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களை பாஜக பிரமுகரும், உள்ளூர் முக்கியஸ்தருமான பட்டு ராமசுந்தரம் நிர்வகித்து வந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதாக தெரிகிறது.
கோயில் நகை
இதையடுத்து கோயிலுக்கு உடைமைப்பட்ட நகைகளை ஒப்படைக்குமாறு பொதுமக்களும், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும் பட்டு ராமசுந்தரத்திடம் கேட்டு வந்திருக்கின்றனர். ஆனால் அந்த நகைகளை பட்டு கொடுப்பது போல் தெரியவில்லை. இதோ அதோ என நாட்களை கழித்து வந்த நிலையில், பொதுமக்களில் சிலரே இதில் தலையிட்டு கோயில் நகைகளை மீட்க தீவிரம் காட்டத்தொடங்கினர். இந்நிலையில் அவர்கள் வலியுறுத்தலின் பேரில் இந்துசமய அறநிலையத்துறை தக்கார் காந்திமதி போலீஸில் இது தொடர்பாக புகார் அளித்திருக்கிறார்.
தலைமறைவு
அதன் பேரில் கோயில் நகைகளை கையாடல் செய்ததாக பாஜக பிரமுகர் பட்டு ராமசுந்தரம், அவரது சகோதரர்கள் மற்றும் அவருக்கு துணை போனவர்கள் என 6 பேர் மீது 7 பிரிவுகளில் குரும்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருப்பவர்களை தேடி வருகின்றனர். இந்த நிகழ்வுடன் தொடர்புப்படுத்தப்படும் பட்டு ராமசுந்தரம், பாஜகவின் முக்கிய நிர்வாகிகளோடு தனக்கு நெருங்கிய நட்பு இருப்பதாக ஊருக்குள் கூறி திரிந்தது இப்போது தெரியவருகிறது.
அமைச்சர் சேகர்பாபு
இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துக்களை மீட்பதில் அமைச்சர் சேகர்பாபு காட்டும் தீவிரத்தின் காரணமாக இந்த நிகழ்வு வெளிச்சத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கையாடல் செய்யப்பட்ட வீரமாணிக்கம் கோயில் நகையின் மதிப்பு 100 சவரன் இருக்கும் என்று ஒரு தரப்பும் 60 சவரன் இருக்கும் என மற்றொரு தரப்பும் கூறுவது கவனிக்கத்தக்கது.