முதல்வர் ஸ்டாலின் பற்றி காது கூசும் விதமாக பேச்சு.. அதிமுக முன்னாள் அமைச்சர் மீது பாய்ந்தது வழக்கு!
தூத்துக்குடி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பற்றி அவதூறாக பேசியதாக திமுகவினர் அளித்த புகாரில் விளாத்திகுளம் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி மாலை விளாத்திகுளம் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில், பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழா மற்றும் மதுரை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தூத்துக்குடி எம்.பி கனிமொழி கருணாநிதி உட்பட முதல்வரின் குடும்பத்தினரை பொதுவெளியில் மிகவும் கொச்சை வார்த்தைகளைப் பயன்படுத்தி இழிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனை கண்டித்து, விளாத்திகுளம் திமுக நிர்வாகிகள் விளாத்திகுளம் காவல் நிலையத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரை அருவருக்கத்தக்க வகையில் இழிவாகப் பேசிய முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி புகார் அளித்தனர்.
திமுகவினர் அளித்த புகாரின் பேரில், விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 294(B), 153(A), 505(2) , ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளதால், சி.த.செல்லப்பாண்டியன் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications