வம்பை விலைக்கு வாங்கும் அனுதாபிகள்; அமைச்சர் அனிதாவை சுற்றும் சர்ச்சைகள்; இமேஜ் டேமேஜ்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஒன்றியச் செயலாளர் இளையராஜா செய்த காரியம் ஒன்று, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பெரும் தலைவலியை கொடுத்திருக்கிறது.
ஏற்கனவே தனது உதவியாளர் போலீஸ்காரரை கன்னத்தில் அறைந்தது, அரசு சுற்றுலா மாளிகை ஊழியரை ஆதரவாளர் தாக்கியது என பெரும் பிரளயத்திலிருந்து மீண்ட அமைச்சருக்கு இப்போது கட்சி நிர்வாகி ரூபத்தில் ஷைத்தான் சைக்கிளில் வந்துள்ளது.
கட்சியை வளர்க்கும் பணியை விட்டுவிட்டு பயிற்சி பல் மருத்துவரை கடத்தி அவரை தாக்கிய வழக்கில், அமைச்சர் அனிதாவின் தீவிர ஆதரவாளரும் அவரால் ஒன்றியச் செயலாளர் பதவி வழங்கப்பட்டவருமான இளையராஜா கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆடு திருடர்களை நள்ளிரவில் பைக்கில் துரத்திய எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை.. திருச்சியில் அதிர்ச்சி!
திருச்செந்தூர் தொகுதி
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதியை பொறுத்தவரை தமிழகத்தின் ஸ்டார் தொகுதி என்றே குறிப்பிடலாம். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுப்ரமணியசாமி கோயில் அமைந்துள்ள திருச்செந்தூர் தொகுதியிலிருந்து ஒரு முறை இரு முறை அல்ல 5 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றிருக்கிறார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். 21 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஒரே நபர் ஒரு தொகுதியில் வெற்றிபெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.
அரசியல் பக்குவம்
ஆனால் இத்தகைய சாதனைகளை அவர் படைத்ததாலும், ஐ-பேக் கொடுத்த நற்சான்றிதழாலும் தான் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமைச்சரவையிலேயே அனிதாவை சேர்த்தார் முதலமைச்சர் ஸ்டாலின். நீண்ட நாட்களாக எம்.எல்.ஏ.வாக இருப்பதால் அவரது செயல்பாடுகளில் பக்குவம் வெளிப்படும் என எதிர்பார்த்த ஆட்சி மேலிடத்துக்கு அண்மைக்காலமாக அவரை பற்றி வரும் புகார்கள் தலை சுற்ற வைக்கும் வகையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிரீன் சிக்னல்
ஒட்டப்பிடாரம் ஒன்றியச் செயலாளராக இருக்கும் அனிதாவின் தீவிர ஆதரவாளரான இளையராஜா என்பவர், காதல் விவகாரத்தில் தலையிட்டு பயிற்சி மல் மருத்துவரை கடத்தி தாக்கிய நிகழ்வு காவல்துறை உயரதிகாரிகள் மூலம் ஆட்சி மேலிடத்தின் கவனத்திற்கு சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து சொந்தக் கட்சியின் ஒன்றியச் செயலாளராக இருந்தாலும் கூட கைது நடவடிக்கைக்கு முதல்வர் தரப்பு தாமதமின்றி கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறது.
முதல்வரின் நண்பர்
இதனை தனக்கான பெரும் பின்னடைவாக கருதும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தலைமையின் கோபத்தை தணிக்க என்ன செய்வது எனத் தெரியாமல் தடுமாற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. உதவியாளர், ஆதரவாளர் என ஏற்கனவே இரண்டு பேர் வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கி அமைச்சருக்கு சிக்கல் ஏற்படுத்திய வடு மறைவதற்குள் அடுத்த பிரச்சனை அனிதாவை மையம் கொண்டிருக்கிறது. முதல்வரின் நண்பரும் தொழிலதிபருமான ராஜா சங்கர், அமைச்சர் அனிதாவுக்காக பரிந்து பேசுவதை கைவிட்டுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இமேஜ் டேமேஜ்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் இமேஜ் டேமேஜ் ஆனதற்கு காரணமே அனுதாபிகள் என்ற போர்வையில் அவருடன் இருப்பவர்கள் செய்யும் காரியங்கள் தான் எனக் கூறுகிறார்கள் உள் விவரமறிந்தவர்கள். இதனிடையே வம்பு வழக்குகளில் சிக்கினால் வக்காலத்து வாங்க தாம் வரமாட்டேன் என்பதை கட் அண்ட் ரைட்டாக அனுதாபிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.