கடம்பூர் பேரூராட்சி தேர்தல்.. முதல் முறையாக கைப்பற்றி அசத்திய திமுக கூட்டணி!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில், 9 வார்டுகளுக்கு பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில், திமுக கூட்டணி 8 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் கடம்பூர் பேரூராட்சியை திமுக முதல் முறையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது, தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் 12 வார்டுகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், 1வது வார்டில் எஸ்.வி.எஸ்.பி. நாகராஜா என்பவரும், 2வது வார்டில் ராஜேஸ்வரி என்பவரும், 11வது வார்டில் சிவகுமார் என்பவரும் சுயேச்சையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள 9 வார்டுகளில் தேர்தல் நடைபெற இருந்த நிலையில், தேர்தல் விதிமுறைகளை பின்பற்றவில்லை என புகார் எழுந்தது. இதனையடுத்து, பிப்ரவரி மாதம் 7-ம் தேதி, கடம்பூர் முதல் நிலை பேரூராட்சி அனைத்து வார்டுகளுக்கான தேர்தலை ரத்து செய்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து கடம்பூர் பேரூராட்சிக்கான 9 வார்டுகளில் மட்டும் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 9 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 29ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில், திமுக 7 வார்டுகளிலும், மதிமுக, காங்கிரஸ் கட்சிகள் தலா ஒரு இடத்திலும் போட்டியிட்டன. மேலும் 13 சுயேச்சை வேட்பாளர்களும் களமிறங்கினர். அதிமுக சார்பில் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. இந்தத் தேர்தல் மொத்தமுள்ள 2,470 வாக்குகளில் 1,598 பேர் தேர்தலில் வாக்களித்தனர். இந்தத் தேர்தலில், 65 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை, இன்று கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் தேர்தல் நடைபெற்ற 9 வார்டுகளில், திமுக கூட்டணி 8 இடங்களை கைப்பற்றியது. திமுக 6 இடங்களிலும், மதிமுக மற்றும் காங்கிரஸ் தலா ஒரு இடத்திலும் மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் வெற்றிபெற்றுள்ளனர். இதன்மூலம் கடம்பூர் பேரூராட்சியை முதல் முறையாக திமுக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
கடம்பூர் பேரூராட்சி தேர்தல்.. 9 வார்டுகளுக்கு வாக்குப்பதிவு-மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு!