“அவர்களே தேசிய பேரிடர்தான்..” வயநாடு நிலச்சரிவு விவகாரத்தில் மத்திய அரசை தாக்கிய எம்.பி கனிமொழி!
தூத்துக்குடி: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரள அரசு கோரிக்கை வைத்திருந்தது. ஆனால் மத்திய அரசு இந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இந்நிலையில், இது குறித்து திமுக எம்பி கனிமொழி மத்திய அரசு மீது சரமாரியான விமர்சனங்களை அடுக்கியுள்ளார்.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 30ம் தேதி அதிகாலையில் வயநாடு மாவட்டம் மேப்பாடி அடுத்த சூரல்மலை பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு ஏற்பட்டு இரண்டு மணி நேரத்தில், அதாவது அதிகாலை 4.30 மணியளவில் மேப்பாடிக்கு அருகில் உள்ள பகுதிகளில் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

மக்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது இந்த நிலச்சரிவு ஏற்பட்டதால், என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்கு கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. மேற்குறிப்பிட்ட பகுதியில் இருந்த வீடுகள் அனைத்தும் மண்ணால் மூடப்பட்டிருக்கின்றன. விவரமறிந்த மீட்பு படையினர் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்
தற்போதுவரை 300க்கும் அதிமானோர் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். உயிரிழப்பை பொறுத்தவரை தொடக்கத்தில் 100-150 என்கிற அளவில்தான் இருந்தது. ஆனால் தற்போதைய நிலவரப்படி சுமார் 300க்கும் அதிகமான சடலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன என கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. தோண்ட தோண்ட சடலங்கள் வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
கனமழை தொடர்ந்து வருவதால் சாலைகள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. இதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில், 3 கிராமங்களை சேர்ந்த 1000 பேர் மண்ணுக்கு அடியில் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அதேபோல 100க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்று தெரியவில்லை.
கேரளா இதுவரை பார்த்திராத இயற்கை பேரழிவாக இது இருக்கிறது. எனவே இந்த துயரத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரள மாநில அரசும், காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தி வருகின்றன. கேரள அரசு இந்த பேரழிவை மாநில பேரிடராக அறிவித்திருக்கிறது. ஆனால் மத்திய அரசுக்கு கேரள அமைச்சரவை கடிதம் எழுதியும், இதுவரை மத்திய அரசு இது குறித்து வாய் திறக்கவில்லை.
இப்படி இருக்கையில் இது குறித்து திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி மத்திய அரசு மீது கடும் விமர்சனங்களை அடுக்கியுள்ளார். தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
"அவர்கள் எதையும் தேசிய பேரிடராக அறிவிக்க தயாராக இல்லை. ஏனெனில் அவர்களே ஒரு தேசிய பேரிடர்தான். தூத்துக்குடியில் மழை வெள்ளம் வந்தபோதும், முன்கூட்டியே உரிய எச்சரிக்கையை கொடுத்துவிட்டோம் என்று சொன்னார்கள். அதேபோல கேரள நிலச்சரிவுக்கும் கூறுகிறார்கள். இதனை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மறுத்திருக்கிறார். அவர்கள் பாதிக்கப்படும் மாநிலங்களக்கு உதவி செய்வதில்லை, மாறாக முன்னெச்சரிக்கை செய்துவிட்டோம் என்று கூறி வருகிறார்கள்" என்று விமர்சித்திருக்கிறார்.
முன்னதாக கடந்த ஆண்டு சென்னையில் ஏற்பட்ட புயல் பாதிப்பு மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு ஆகியவற்றை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தியிருந்தது. ஆனால், மத்திய அரசு இதை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications