அதிமுக ஆட்சியில் செய்த அந்த தவறு.. அண்ணா பல்கலைக்கழகம் பாலியல் வழக்கில் கனிமொழி பகீர்
தூத்துக்குடி: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை கண்டித்து எதிர்க்கட்சிகளின் போராட்டம் வலுத்து வருகிறது. இதுகுறித்து பேசிய திமுக எம்பி கனிமொழி, அதிமுக ஆட்சியில் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டதே, இப்போதையே சம்பவத்துக்கு காரணம் என்று கூறியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தீவிரமடைந்து வருகிறது. ஏற்கனவே அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசு மற்றும் காவல்துறை கடுமையான கண்டித்து வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பான எப்ஐஆர் கசிந்தது கடும் சர்ச்சையாகியுள்ளது. கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுக அமைச்சர்களுடன் புகைப்படம் எடுத்ததும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரிப்பதற்காக சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் சினேக பிரியா, ஆவடி துணை ஆணையர் அய்மன் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் எப்ஐஆர் கசிந்த விவகாரத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சம்மந்தப்பட்ட காவலர்களிடம் வசூலித்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மாணவியிடம் இருந்து கல்விக் கட்டணம், விடுதி கட்டணம் உள்ளிட்ட எதுவும் வசூலிக்காமல் கல்வியை தொடர அனுமதிக்க வேண்டும். இதுபோன்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் வழக்கில் எப்ஐஆர் கசியாமல் இருப்பதை காவல்துறை உறுதிபடுத்த வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்நிலையில் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாருமான கனிமொழி கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்பதுதான் அனைவருடைய எண்ணமும். முதலமைச்சர் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் சம்பந்தப்பட்ட குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் கூறியிருக்கிறார்கள். அதன்படி குற்றவாளி கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் இருந்தபோது அவர்கள் மீது ஒரு குற்றச்சாட்டு வந்தபோது, அந்த எஃப்ஆர்ஐயே அவர்கள் மாற்றியிருக்கிறார்கள். பாலியல் ரீதியான தொல்லை தந்ததோடு இல்லாமல், ஒரு குற்றவாளி அந்தப் பெண்ணின் சங்கிலியையும் பறித்திருக்கிறார். அப்போது, அந்த வழக்கை சங்கிலிப் பறிப்பாக மட்டுமே வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
அப்போதே குற்றவாளிக்கு சரியான தண்டனை கிடைத்திருந்தால் அதற்குப் பிறகு ஒரு கண்காணிப்பாவது இருந்திருக்கும். அது நடைபெறவில்லை. அதிமுக ஆட்சியில் கடமையை செய்யத் தவறியதால் இந்த ஒரு சம்பவம் நடைபெற காரணமாக அமைந்திருக்கிறது. இந்தியாவிலேயே அதிகமாக பெண்கள் உயர்கல்விக்குப் போகக்கூடிய ஒரு மாநிலத்தில் எல்லா பெற்றோர்களும் அச்சப்படுகின்றனர் என்ற தவறான கருத்தை எடுத்துச் செல்லும்போது, பெண்களுடைய கல்வியும், எதிர்காலமும் பாதிக்கப்படும் என்பதை எதிர்க்கட்சிகள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
முதலமைச்சரும், திமுகவும் எப்போதும் பெண்களின் உரிமைக்காக, கல்விக்காக அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்று வருகிறோம். பெண்கள் பொது தளத்தில் அதிகம் பணியாற்றி அவர்களின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்று எண்ணத்தில் பயணிக்கிறோம். பெண்கள் மீது முதலமைச்சருக்கும், எங்கள் கட்சிக்கும் மிகுந்த அக்கறை உள்ளது. அதன் காரணமாக தான் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." என்றார்.












Click it and Unblock the Notifications