குட்டிக் கதை கூறிய எடப்பாடி பழனிச்சாமி.. கண் முன்னே ஓடிய நடிகர் கார்த்திக் நடித்த திரைப்படம்!
திருச்செந்தூர்: நாங்கள் வாய்ச் சொல் வீரராக இல்லை. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிக்காமல் சாத்தியமான திட்டங்களை மட்டுமே அறிவித்து வருகிறோம். இதை கூறும் போது எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது என எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா பாணியில் குட்டி கதையை கூறினார்.
திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் டாக்டர் பா சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குட்டிக் கதை ஒன்றை கூறினார்.
அவர் கூறுகையில் நாங்கள் வாய்ச் சொல் வீரராக இல்லை. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிக்காமல் சாத்தியமான திட்டங்களை மட்டுமே அறிவித்து வருகிறோம். இதை கூறும் போது எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

முடிவு
3 பேர் சேர்ந்து ஒரு லாட்டரி சீட்டு வாங்கி பரிசு விழுந்தால் கடவுளுக்கு சமபங்கு தருவோம் என முடிவு செய்தனர். அந்த லாட்டரிக்கு பரிசும் விழுந்தது. பணத்தை வாங்குவதற்கு முன்னர் 3 பேருக்கும் ஒரே சிந்தனை தோன்றியது. கடவுளுக்கு கொடுப்பதாக கூறிய ஒரு பங்கை தரக் கூடாது என்பதுதான்.

கடவுள்
தாங்கள் அவசரப்பட்டு செய்த சத்தியத்திலிருந்து எப்படி தப்புவது என சிந்தனை செய்தனர். அப்போது முதல் நபர் கூறுகையில், தரையில் ஒரு சிறிய வட்டம் வரைவோம், எல்லா பணத்தையும் நாணயங்களாக்கி மேல் நோக்கி எறிவோம். சின்ன வட்டத்திற்குள் விழுவது கடவுளுக்கு என்றார், இன்னொருவர் மிகப்பெரிய வட்டம் வரைவோம். நடுவில் நின்று கொண்டு பணத்தை மேல் நோக்கி வீசுவோம். அந்த வட்டத்துக்கு வெளியே எவ்வளவு பணம் விழுகிறதோ அது கடவுளுக்கு என்றார்.

ஆணவம்
இதையடுத்து 3ஆம் நபர் அவர் மிகவும் புத்திசாலி அவர் கூறுகையில், பணத்தை மேலே வீசுவோம். மேலேயே நின்றுவிடும் பணம் கடவுளுக்கு கீழே விழுகிற பணத்தை மட்டும் நாம் எடுத்துக் கொள்வோம் என்றார் பெருந்தன்மையாக!. இவர்களிடம் நல்ல குணம் இல்லாதது மட்டுமல்லாமல் கடவுளை விட தாங்களே கெட்டிக்காரர்கள் என்ற ஆணவத்தையும் கொண்டிருந்தனர்.

3 பேரை
இவர்களை போலத்தான் சிலர் செய்ய முடியாதவற்றை எல்லாம் செய்வோம் என உண்மைக்கு புறம்பாக மக்களிடம் கூறி நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றனர். ஆனால் அவ்வாறு வெற்றி பெற்றவர்கள் 3 பேரை போல் சொன்னதை செய்யவில்லை. இதை அறிந்து கொண்ட மக்கள் அவர்களுக்கான தண்டனையை இடைத்தேர்தல்களிலும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் வழங்கினார்கள் என தெரிவித்தார்.

திருடிய இருவர்
எடப்பாடி பழனிச்சாமி சொன்ன குட்டிக் கதை நடிகர் கார்த்திக், ரோஜா நடித்த உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது. கார்த்தியும், இயக்குநர் ரமேஷ் கண்ணாவும் திருடுவர். அவ்வாறு திருடும் பணத்தில் ஒரு பங்கை கடவுளுக்கு அளிப்பதாக கூறுவர். அன்றைய தினம் திருடிய போது அதிக பணம் கிடைத்திருக்கும்.

நாணயம்
அப்போது கடவுளின் உண்டியலுக்கு கொடுக்க பணமில்லாமல் கார்த்தி ஒரு சிறிய வட்டத்தை வரைந்து கிடைத்த சில்லரையை தூக்கி எறிவார். அப்போது அந்த வட்டத்தில் ஒரு ரூபாய் மட்டுமே விழும். உடனே கார்த்தி கடவுளே யூ வாண்ட் ஒன்லி ஒன் ருப்பீ! என கேட்டுவிட்டு அந்த நாணயத்தை உண்டியலில் போடுவார். அப்போது ரமேஷ் கண்ணா, கடவுளே உன்னை சிறிய வட்டத்திற்குள் அடைக்க விரும்பவில்லை. நான் காசுகளை மேலே தூக்கி எறிகிறேன். தேவையானதை எடுத்துக்கோ, நீயா பார்த்து கீழே போட்டதை நான் எடுத்து கொள்கிறேன் என்பார்.












Click it and Unblock the Notifications