15 பாயிண்ட்ஸ்..தேர்தலுக்குப் பின் சசிகலா கையில் அதிமுக? இவரும் சேரப் போறாரா? கடுகடுத்த கடம்பூர் ராஜு
தூத்துக்குடி: நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவை கைப்பற்றுவோம் என்று சசிகலா கூறுவது நானும் இருக்கிறேன் என்பதை காட்டிக் கொள்வதற்காகவே எனவும், அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு சசிகலாவே முதல்வராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீதிமன்ற தீர்ப்பு காரணமாக அவர் சிறை செல்ல நேர்ந்தது. தொடர்ந்து அவரது ஆதரவின் பேரில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார்.

தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த போதும், சிறையில் இருந்த போதும் சிறையில் இருந்து வெளிவந்த போதும் சசிகலாவை அவர் புறக்கணித்தார்.
சசிகலா: மேலும் சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து சசிகலாவை கட்சியை விட்டு நீக்கியதோடு சிறையை விட்டு அவர் வெளியே வந்த பிறகும் அவரை சந்திக்கவில்லை. இந்த நிலையில் ஆரம்பத்தில் இணக்கமாக இருந்த பன்னீர்செல்வம் தற்போது கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். மேலும் ஏற்கனவே கட்சியை விட்டு நீக்கப்பட்ட டிடிவி தினகரன் தனி கட்சி ஆரம்பித்து தற்போது பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி: தற்போது இருவருமே பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிடும் நிலையில் அதிமுக தேர்தலில் பலத்த பின்னடைவை சந்திக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளிவந்தன. இந்நிலையில் தேர்தல் வாக்குப் பதிவின் போது பேசிய சசிகலா,"மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு எங்களில் ஒருவர் திருந்துவதற்கான வாய்ப்பு இருக்கும். அவர்கள் போட்ட தப்புக் கணக்கு அவர்களுக்கு புரியும்" என பேசியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை குறி வைத்தே சசிகலா இப்படி பேசியதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
15 கேள்விகள்: இதற்கிடையே இந்த நிலையில் அதிமுக தொண்டர்கள் அனைவருக்கும் என ஒரு விண்ணப்ப படிவத்தை அனுப்பி வைத்திருக்கிறார் சசிகலா. பார்ப்பதற்கு உறுப்பினர் சேர்க்கை படிவம் போலவே இருக்கும் அந்த படிவத்தில் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு 15 கேள்விகள் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து அதிமுகவில் மீண்டும் தனது செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ள சசிகலா முயன்று வருவதாக கூறப்படுகிறது.
கடம்பூர் ராஜு: அதே நேரத்தில் அதிமுகவினர் இதனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என முன்னாள் அமைச்சர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் சசிகலாவின் படிவம் குறித்தும் அதிமுகவை கைப்பற்றுவோம் என்ற பேச்சு குறித்தும் பதில் அளித்திருக்கிறார் முன்னாள் அமைச்சரும் பழனிச்சாமியின் ஆதரவாளருமான கடம்பூர் ராஜு. இதுதொடர்பாக பேசியுள்ள அவர்,"நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவை கைப்பற்றுவோம் என்று சசிகலா கூறுவது நானும் இருக்கிறேன் என்பதை காட்டிக் கொள்வதற்காக அறிக்கை விடுகிறார் அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications