இந்தியாவிலேயே முதல்முறை "இப்படி" ஒரு பூங்காவா! தூத்துக்குடிக்கு அடித்த லக்! 3.5 லட்சம் பேருக்கு வேலை
தூத்துக்குடி: தூத்துக்குடியில் அடிக்கல் நாட்டப்பட்டு இருக்கும் பர்னிச்சர் பூங்கா மூலம் 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video
தூத்துக்குடியில் இன்று பல்வேறு பூங்காக்கள், மின் உற்பத்தி மையங்களை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசினார். பல்வேறு முதலீட்டார்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் தூத்துக்குடியில் அமைய உள்ள பர்னிச்சர் பூங்கா பற்றி முதல்வர் ஸ்டாலின் விரிவாக பேசினார்.
முதல்வர் ஸ்டாலின் தனது உரையில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சி தொடங்கி 10 மாதம் முடிந்துள்ளது. தினமும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறோம். மக்களுக்கு பல நலத்திட்டங்களை அறிவித்து வருகிறோம்.
தூத்துக்குடி: ரூ1,000 கோடியில் 1,150 ஏக்கரில் பர்னிச்சர் பூங்கா- அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்
பல திட்டங்கள்
மக்களிடம் செல், மக்களிடம் வாழ் என்று அண்ணா வாக்கிற்கு இணையாக ஆட்சி நடத்தி வருகிறோம். இந்தியாவின் தென் பகுதியில் உள்ள மாவட்ட தூத்துக்குடி. இங்கு அறைகலன் பூங்கா, பர்னிச்சர் பூங்கா அமைய உள்ளது. இரண்டு பூங்காவும் இந்தியாவில் முதல்முறை ஒரு மாநிலத்தில் அமைக்கப்படுகிறது என்றால் அது தமிழ்நாட்டில்தான்.. அதுவும் தூத்துக்குடியில்தான்.
முத்து நகர்
தமிழ்நாட்டின் 10வது மாநகராட்சி.. முத்துக்குளிக்கும் நகரம் இந்த முத்து நகர். ஏராளமான திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்றுதான் மாநகராட்சி என்று தூத்துக்குடியை முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதன்படியே தற்போது நாங்கள் புதிய திட்டங்களை இங்கே அறிவித்து வருகிறோம். தென் தமிழகத்திற்கு என்று பெரிய திட்டங்கள் இல்லை என்ற வருத்தம் உள்ளது. இவர்களுக்கு என்று திட்டங்களை உருவாக்கி, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
வாழ்வாதாரம்
இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கத்தில்தான் இந்த பூங்காக்கள் அமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம், அகில இந்திய அளவில் மூன்றாவது பெரிய கொள்ளளவு கொண்ட துறைமுகம் தூத்துக்குடி. இதை கருத்தில் கொண்டே இங்கு இந்த இரண்டு பெரிய பூங்காக்கள் அமைக்க முடிவு செய்து உள்ளோம். தமிழ்நாடு கொரோனாவில் இருந்து வேகமாக மீண்டும், பொருளாதார ரீதியாக கடந்த 10 மாதமாக முன்னேறி வருகிறது.
திராவிட மாடல்
திராவிட மாடல்படி ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் 10 மாதங்களில் 3 முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று இருக்கிறது. 2 மாநாடு சென்னையிலும், ஒன்று கோவையிலும் நடத்தப்பட்டது. என்று முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார். சரி இந்த பூங்காவின் சிறப்பம்சங்களை பார்க்கலாம். தூத்துக்குடி சிப்காட் பூங்காவில் 1150 ஏக்கர் பரப்பளவில் இந்த பர்னிச்சர் பூங்கா அமைய உள்ளது. மொத்தம் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகளை ஏற்கனவே சிப்காட் அரசும், மாவட்ட நிர்வாகமும் ஏற்கனவே செய்தது. இதனால் இனி கட்டுமான பணிகள் மட்டுமே நடக்க வேண்டும்.
நிலம்
ஏற்கனவே இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து முடித்துவிட்டன. அதேபோல் சுற்றுசூழல் அனுமதியும் ஏற்கனவே பெறப்பட்டுவிட்டது. மக்களின் முழு அனுமதியோடு இந்த திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த பூங்கா காரணமாக இதனால் ஒன்றல்ல.. இரண்டல்ல அடுத்த எட்டு ஆண்டுகளில் 3.5 லட்சம் பேருக்கு வேலை கிடைக்க போகிறது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. பர்னிச்சர் தொழிலுக்கென தனியாக நாட்டிலேயே முதல் சிறப்பு பொருளாதார மண்டலமாக அமைக்கப்படுகிறது இந்தப் பூங்கா.
முதல்முறை
நாட்டில் வேறு எங்கும் இதற்காக பூங்கா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மர அறுவை ஆலை, பர்னிச்சர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், பர்னிச்சர் ஏற்றுமதி இறக்குமதி, பர்னிச்சர் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை செய்யும் வகையில் சுமார் 100 நிறுவனங்கள் இதில் இடம் பெறுகின்றன. பல்வேறு உள்நாட்டு நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு அமைக்கப்பட்டு அதன் மூலம் இங்கே வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது.
வெளிநாடுகள்
வெளிநாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்கள் போன்ற வளர்ந்த நிறுவனங்கள் மட்டும் இங்கு இடம்பெறவில்லை. பர்னிச்சர் தொழில் சார்ந்த உதிரி பாகங்களை தயார் செய்யும் சிறு, குறு தொழில் நிறுவனங்களும் இந்த பூங்காவில் இடம்பெறும். இதனால் சிறிய அளவில் தூத்துக்குடியில் நிறுவனங்களை நடத்தி வந்தவர்கள் விரைவில் இங்கு நிறுவனங்களை விரிவுபடுத்தி பெரிய நிறுவனங்களாக தொடங்க முடியும்.
வேலைவாய்ப்பு
பர்னிச்சர் தொழில் பூங்கா மூலம் ஆண்டுதோறும் சுமார் 5 ஆயிரம் பேருக்கு திறன் பயிற்சி அளிக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதாவது இங்கேயே தங்கி பர்னிச்சர் துறை தொடர்பான பல்வேறு பயிற்சிகளை இங்கே மேற்கொள்ள முடியும். இங்கு பயிற்சிக் கூடம், பர்னிச்சர் பொருட்களின் தரத்தை பரிசோதிக்கும் ஆய்வுக்கூடம், கூட்ட அரங்கம், தங்கும் விடுதிகள்,ஹோட்டல்கள் போன்ற அனைத்து வசதிகளும் அங்கு இடம்பெறும்.
ஏன் முக்கியம்
இந்த பூங்கா மூலம் சுமார் ரூ.4,500 கோடிக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.தென் மாவட்ட மக்களுக்கு போதிய அளவிலான நலத்திட்டங்கள் கொண்டு வரப்படவில்லை என்று கடந்த பல வருடங்களாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. சென்னைக்கு மட்டுமே அதிக மதிப்பு கொடுக்கப்படுவதாக புகார்கள் வைக்கப்பட்டு வந்தன.
தென் தமிழ்நாடு
இந்த நிலையில்தான் தற்போது தென் மாவட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இதனால் முத்துநகர் தூத்துக்குடி, மீன் பிடி தொழில், ஏற்றுமதி, இறக்குமதி, உப்பு விற்பனை ஆகியவை தாண்டி இனி பர்னிச்சர் துறையிலும் மிளிர போகிறது. இதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகளில் பெரும்பாலான வேலை வாய்ப்புகள் தென் மாவட்ட மக்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.