வருங்கால முதல்வர் பண்ணையார்.. கூட்டத்தில் குரல் கொடுத்த தொண்டர்.. நயினார் கொடுத்த ரியாக்ஷன்
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நயினார் நாகேந்திரன் சென்றிருந்த நிலையில், கூட்டத்தில் இருந்த கட்சி நிர்வாகி ஒருவர் வருங்கால முதல்வர் பண்ணையார் என்று நயினார் நாகேந்திரனை பார்த்து கோஷமிட்டார். அதைப் பார்த்த நயினார் நாகேந்திரன் வேகமாக திரும்பி சிரித்தபடி வேண்டாம் என்று கையை காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட மனதின் குரல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொள்வதற்காக வருகை தந்தார். அவரை பாஜகவினர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். தொடர்ந்து, கால்வாய் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

அப்போது, கூட்டத்தில் இருந்த கட்சி நிர்வாகி ஒருவர் வருங்கால முதல்வர் பண்ணையார் என்று நயினார் நாகேந்திரனை பார்த்து கோஷமிட்டார். அதை பார்த்த நயினார் நாகேந்திரன் வேகமாக திரும்பி சிரித்தபடி வேண்டாம் என்று கையை காட்டினார். இதனால் அங்கு சிறிது சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் கட்சியினருடன் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார்.
கால்வாய் கிராமத்தில் பாஜக கொடியை ஏற்றிவைத்து பொதுமக்கள் மற்றும் கட்சியினருக்கு இனிப்பு வழங்கினார். பின்னர், மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் பேசுகையில், மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பாரத பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியான மனதின் குரல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக கூடுதல் சுமையாக இருக்கும் என சீமான் கூறியது குறித்து கேட்டதற்கு, சுமை இல்லாத கட்சி எது என்று அதையும் அவரே விளக்கமாக கூறி இருக்க வேண்டும். யார் சுமை, யார் சுமை இல்லை என்பது குறித்து சீமான் விளக்கமாக கூறியிருக்க வேண்டும்.
பாஜக கூட்டணியில் விஜய் வர வேண்டும் என்று கூறி வருவது குறித்து கேட்டதற்கு, நடிகர் விஜயிடம் நான் ஆரம்ப கால கட்டத்தில் இருந்தே ஓர் அணியில் திரள வேண்டும் என்று கூறி இருக்கிறேன். நான் நேற்று முதல் ஓர் கோஷத்தை ஆரம்பித்திருக்கிறேன். வேண்டாம் இனி திமுக வேண்டாம். இந்த அடிப்படையில் எல்லோரும் சிந்தனை செய்ய வேண்டும். நாட்டில் நடந்து வரும் பாலியல் வன்கொடுமைகள், சிறுவனை 7 நாட்களாக சிறையில் அடித்து கொலை செய்துள்ளார்கள் காவல் துறை. கர்ப்பிணி பெண்ணை காவல் துறை மிதித்து துன்புறுத்தியுள்ளார்கள்.
மிகவும் ஆபத்தான போதை பொருளை மிகவும் மிக முக்கியமான நடிகர் ஒருவர் பயன்படுத்தி வருவதாக பின்னணி பாடகி ஒருவர் சொல்லியுள்ளார். அவரது பெயரை நான் கூற விரும்பவில்லை. இப்படி தமிழ்நாட்டில் நல்லாட்சி நடைபெறுகிறதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தான் வேண்டாம். இனி திமுக வேண்டாம் என்ற தாரக மந்திரத்தை தேர்தல் வரை எடுத்துச் செல்ல இருக்கிறோம்.
விஜய் பற்றி நான் எந்த கருத்தும் சொல்ல முடியாது. மதுரையில் இந்து முன்னணி நடத்திய மாநாட்டில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் வருகை தந்தனர். மாநாடு குறித்து அமைச்சர் சேகர்பாபு கூறும்போது இது மாநாடு கிடையாது. நாங்கள் நடத்துவது தான் மாநாடு என்று கூறினார். நான் கேட்கிறேன் அவர்கள் எங்கு மாநாடு நடத்தினார்கள். இந்த மாநாடு தமிழ்நாட்டில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும். வரும் 2026 ஆம் ஆண்டு ஆலமரமாக எல்லோருக்கும் பயன் தரும். எல்லோருக்கும் நிழல் தரும் அரசாங்கமாக இந்த அரசாங்கம் வரும் 2026 இல் அமையும்.
தாமிரபரணி நதி தூய்மைப்படுத்துதல் குறித்து கேட்டபோது, தாமிரபரணி நதியை தூய்மைப்படுத்துவதில் எங்களுக்கு எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. இந்த நதியை தூய்மைப்படுத்த தமிழக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசிடம் கோரிக்கை வைத்ததா? நிதி கேட்டதா? தமிழக அரசாங்கம் அதற்கு முயற்சிக்க வேண்டும். நாங்கள் அதற்கு உதவி செய்வோம். ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறையின் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான நடவடிக்கை குறித்து நிச்சயம் பேசுவேன் என்றார்.












Click it and Unblock the Notifications