ஓரினச்சேர்க்கையால் கொலை.. கோவில்பட்டி 10 வயது சிறுவனை கொன்றதாக ஆட்டோ டிரைவர் கைது.. திடுக் தகவல்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 9 ம் தேதி மாயமான 10 வயது சிறுவன் வீட்டு மொட்டை மாடியில் பிணமாக கிடந்தான். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது ஆட்டோ டிரைவர் கருப்பசாமியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து கொன்றதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்த தம்பதியின் 10 வயது சிறுவன் 5ம் வகுப்பு படித்து வந்தான். அம்மை போட்டு இருந்ததால் சிறுவன் பள்ளிக்கு செல்லாமல் இருந்தான்.

இதற்கிடையே தான் கடந்த 9ம் தேதி சிறுவனின் பெற்றோர் வேலைக்கு சென்றனர். இதனால் வீட்டில் தனியாக இருந்த சிறுவன் தனது பாட்டியை வீட்டுக்கு வரும்படி போன் செய்து அழைத்துள்ளார்.
பாட்டி வீட்டுக்கு வந்தபோது சிறுவன் வீட்டில் இல்லை. திடீரென்று மாயமானான். இதனால் அதிர்ச்சியடைந்த பாட்டி சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். குடும்பத்தினர் சிறுவனை உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. அதன்பிறகு கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது மறுநாள் அதாவது டிசம்பர் 10 ம்தேதி சிறுவன் பக்கத்து வீட்டில் உள்ள மாடியில் இறந்து கிடந்தான். சிறுவன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். உடல் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுவனின் ஆசனவாய் மற்றும் வாய் பகுதிகளில் காயங்கள் இருந்தது உறுதியானது. இதனால் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் நேரடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். அதோடு ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் சிறுவன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இதனால் 30க்கும் அதிகமானவர்களை போலீசார் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இருப்பினும் கொலையாளியை கண்டுபிடிப்பதில் சிரமம் நீடித்தது. இந்நிலையில் தான் இன்று சிறுவனை கொலை செய்த வழக்கில் அதேபகுதியை சேர்ந்த கருப்பசாமி என்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுவனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து கொன்றதும் தெரியவந்துள்ளது.
மேலும் சிறுவனை கொன்றாலும் கூட தன்மீது சந்தேகம் வராமல் இருக்க கருப்பசாமி சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து சிறுவனை தேடிவந்ததும் தெரியவந்துள்ளது. கைதான கருப்பசாமியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications