அதிமுகVSபாஜக..'இது கூட தெரியலனா..' டென்ஷன் ஆன கடம்பூர் ராஜூ! . அண்ணாமலைக்கு பறந்த ஸ்ட்ராங் வார்னிங்
அதிமுகவுக்கு எதிராக பாஜக போராட்டத்தில் குதித்துள்ள நிலையில் கடம்பூர் ராஜூ இது தொடர்பாக பேட்டியளித்துள்ளார்
தூத்துக்குடி: சமீபத்தில் பாஜகவிலிருந்து சில முக்கிய புள்ளிகள் அதிமுகவில் இணைந்த நிலையில், அக்கட்சிக்கு எதிராக பாஜகவினர் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். இந்நிலையில், இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பாஜகவை விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தாமரையை மலரச் செய்வது குறித்து கட்சி மேலிடம் தீவிரமாக இருக்கும் நிலையில், தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன் ஆகியோரை களமிறக்கியது. இவர்கள் இருவரும் குறிப்பிடத்தக்க அரசியல் அதிர்வை உண்டாக்கிவிட்டு சென்ற நிலையில், இந்த பொறுப்பு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன் காலத்தில் தேடி தேடி கட்சிக்குள் கொண்டுவரப்பட்ட நபர்கள் அண்ணாமலை காலத்தில் கட்சியை விட்டு வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள்.
டாக்டர் சரவணன் தொடங்கி, திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா, காயத்ரி ரகுராம் என இந்த வெளிநடப்பு பட்டியல் நீண்டுக்கொண்டிருந்தது. இந்த பட்டியலில் சமீபத்தில் இணைந்தவர்தான் சி.டி.நிர்மல் குமார். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியில் பணியாற்றிய இவர் தற்போது கட்சியிலிருந்து விலகுவதாகவும், இதற்கு அண்ணாமலைதான் முழு காரணம் என்றும் கூறியிருந்தார். இதனையடுத்து அதிமுகவில் இணைந்தார்.

அதிமுகவில் ஐக்கியம்
இவர் பாஜகவிலிருந்து விலகிய அடுத்த நாளில் பாஜக தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளராக பணியாற்றி வந்த திலீப் கண்ணன் மற்றும் OBC அணி மாநில செயலாளர் ஜோதி ஆகியோரும் அதிமுகவில் இணைந்தனர். இது பாஜகவின் பலவீனத்தை பிரதிபலிப்பதாக அரசியல் விமர்சகர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் இதற்கெல்லாம் அசராத பாஜக அடுத்த நாளில் அதிமுக கட்சி உறுப்பினர்கள் 50 பேரை தனது கட்சியில் இணைத்துக்கொண்டது. மேலும் கோவில்பட்டியில் அதிமுகவுக்கு எதிராக பாஜகவினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

பேட்டி
இப்போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டு அவரது உருவபொம்மையும் எரிக்கப்பட்டது. அதேபோல அவருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களும் ஒட்டப்பட்டன. இந்த போராட்டம் தொடர்பாக இதுவரை 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து இன்று கடம்பூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

உருவப்படம் எரிப்பு
அதில் அவர் கூறியதாவது, "கட்சி தாவல் விஷயங்கள் மிகவும் இயல்பான ஒன்று. ஐடி விங் தலைவர்கள் அதிமுகவுக்கு வருவதால் பாஜகவினர் ஏன் கோபப்பட வேண்டும்? பாஜகவிலிருந்து இங்கு வருவதை போல இங்கிருந்தும் சிலர் அங்கு சென்றிருக்கிறார்கள். கோவில்பட்டியில் நடந்த போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரித்தவர் ஒரு விளம்பர விரும்பி. இந்த சம்பவம் குறித்து அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும்.

கானல் நீர்
சம்பந்தப்பட்ட நபர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்ததற்கு இவ்வளவு பேசுகிறீர்களே, ஒரு வேளை அவர் திமுகவில் இணைந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? தானாக விரும்பி தங்கள் கட்சியில் வந்து சேர்பவர்களை எந்த கட்சியாக இருந்தாலும் அரவணைத்துக்கொள்ளும். இந்த அரசியல் அரிச்சுவடி கூட அண்ணாமலைக்கு தெரியவில்லை. அதிமுகவை எதிர்ப்பது என்பது கானல் நீராகத்தான் போய் முடியும். ஆக இந்த விவகாரத்தில் அண்ணாமலையின் நடவடிக்கை என்ன என்பது குறித்து பொறுத்திருந்து பார்ப்போம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications