இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள்! டன் கணக்கில் அரிசி-பால் பவுடர்-மருந்துகளுடன் புறப்பட்ட 3-வது கப்பல்!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கப்பல் மூலம் 16 ஆயிரத்து 800 டன் அளவிலான நிவாரணப் பொருட்களை கொடியசைத்து அனுப்பி வைத்துள்ளார் கனிமொழி எம்.பி.
தமிழகத்திலிருந்து 16,500 டன் அரிசி, 250 டன் ஆவின் பால் பவுடர், 50 டன் மருந்துகளுடன் 3-வது கப்பல் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு;

நிவாரணப் பொருட்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அங்குள்ள மக்களுக்கு உதவும் வகையில் தமிழகத்திலிருந்து அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்படும் எனத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி சென்னை துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் கடந்த மே மாதம் 18-ந்தேதி முதல் கட்டமாக ரூ.30 கோடி மதிப்பிலான பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த கப்பலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

3-வது கப்பல்
இதன் தொடர்ச்சியாக 2-ம் கட்டமாகக் கடந்த மாதம் 22 ந் தேதி அன்று தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் ரூ.67.70 கோடி மதிப்பிலான 15 ஆயிரம் டன் எடையுள்ள பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டன. இந்நிலையில் இன்று தொடர்ந்து 3-வது கட்டமாக நிவாரண பொருட்கள் இன்று தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

டன் கணக்கில்
ரூ.54 கோடி மதிப்பிலான 16,500 டன் அரிசி, ரூ.6 கோடி மதிப்பிலான 250 டன் ஆவின் பால் பவுடர், ரூ.14 கோடி மதிப்பிலான 50 டன் உயிர் காக்கும் மருந்துகள் என மொத்தம் ரூ.74 கோடி மதிப்பிலான 16,800 டன் எடையுள்ள பொருட்கள் கப்பலில் ஏற்றப்பட்டு தயாராக இருந்தது. இதனை தொடர்ந்து நிவாரண பொருட்கள் ஏற்றப்பட்ட கப்பல் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இன்று காலை 10 மணிக்கு கொழும்பு துறைமுகத்துக்கு புறபட்டு சென்றது. இந்த கப்பலை, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் கொடியசைத்து அனுப்பிவைத்தார்.

அமைச்சர்கள் 3 பேர்
இந்த நிகழ்வில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications