‛‛கள்ளக்குறிச்சி விவகாரம்’’.. நிருபர்களை 2 மணிநேரம் காக்க வைத்த கனிமொழி.. கடைசியில் செய்ததை பாருங்க
தூத்துக்குடி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தான் தூத்துக்குடியில் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க தயாராக இருப்பதை அறிந்த கனிமொழி எம்பி 2 மணிநேரம் அவர்களை காக்க வைத்து கடைசியில் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 150க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஆனாலும் கூட சிகிச்சை பலனின்றி 55 பேர் வரை பலியாகி உள்ளனர். இன்னும் பலரின் உடல்நிலை மோசமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இந்த விவகாரத்தில் திமுக அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக உள்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினை அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி தலைவர்கள் சரமாரியாக ‛அட்டாக்' செய்து வருகின்றனர். மேலும் இந்த கள்ளச்சாராய விவகாரத்தில் திமுகவினருக்கு தொடர்பு உள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டி வருவதோடு, வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குறித்து திமுகவின் மூத்த தலைவரும், முதல்வர் ஸ்டாலினின் சகோதரியான கனிமொழி எம்பியிடம் கேள்வியெழுப்ப நேற்று பத்திரிகையாளர்கள் தயாராக இருந்தனர். அதாவது கனிமொழி எம்பி தூத்துக்குடி எம்பியாக உள்ளார். இந்நிலையில்தான் தூத்துக்குடியில் செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கான நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி பங்கேற்றார். இதையடுத்து நிகழ்ச்சி முடிந்து வரும் கனிமொழியிடம் கேள்வி கேட்க பத்திரிகையாளர்கள் தயாராக இருந்தனர்.
ஆனால் பத்திரிகையாளர்கள் இருப்பதை அறிந்த கனிமொழி நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. அதாவது செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கான நலத்திட்ட நிகழ்ச்சியை முடித்த கனிமொழி எம்பி தூத்துக்குடி மாவட்ட குடிநீர் பிரச்னை குறித்த கூட்டத்தில் அதிகாரிகளுடன் பங்கேற்றார். இந்த கூட்டம் முடிந்து 2 மணிநேரம் கழித்து கனிமொழி எம்பி வந்த நிலையில் பத்திரிகையாளர்கள் அங்கேயே நின்றனர்.
பத்திரிகையாளர்களை பார்த்த கனிமொழி எனக்கு இன்னும் மீட்டிங் உள்ளது எனக்கூறி செல்ல முயன்றனர். இந்த வேளையில் பத்திரிகையாளர்கள் கள்ளக்குறிச்சி பற்றி கேள்வி எழுப்பியபடி சென்றனர். ஆனால் கனிமொழி சிரித்தபடியே பதிலளிக்காமல் காரில் ஏறினார். அப்போதும் பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்ப முயன்ற நிலையில் கனிமொழி எம்பி காரின் கண்ணாடியை மேலெழுப்பி மூடிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பத்திரிகையாளர்களை சந்திக்க மறுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வரும் நிலையில் அதிமுக, பாஜகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications