சாதியை சொல்லி திட்டியதால் தற்கொலை.. “குற்றவாளிகள் கைதாவதை யாராலும் தடுக்க முடியாது”.. கனிமொழி உறுதி!
தூத்துக்குடி : உடன்குடியில் சாதிய வன்கொடுமையால் தூய்மைப் பணியாளர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளதாக திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
சாதிய வன்கொடுமையால் தற்கொலை செய்து உயிரிழந்த தூய்மை பணியாளர் சுடலைமாடன் குடும்பத்திற்கு திமுக எம்.பி கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, குற்றவாளிகள் கைது செய்யப்படுவதை யாரேனும் தடுத்தால் முதல்வர் அதனை ஏற்றுக்கொள்ளவே மாட்டார் எனத் தெரிவித்தார்.

தூய்மைப் பணியாளர்
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி புதுக்காலனியை சேர்ந்தவர் சுடலைமாடன் (55). இவர் உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். பணி மூப்பு அடிப்படையில் தனக்கு மேற்பார்வையாளராக பதவி உயர்வு கோரி சுடலைமாடன், உடன்குடி பேரூராட்சி தலைவியின் மாமியாரும், முன்னாள் பேரூராட்சித் தலைவியுமான ஆயிஷா கல்லாசி மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் பாபு ஆகியோரை அணுகியுள்ளார்.

உயிரிழப்பு
அப்போது பதவி உயர்வுக்கு சுடலைமாடனிடம் முன்னாள் பேரூராட்சி தலைவி ஆயிஷா கல்லாசி பணம் கேட்டதாகவும், இதற்கு சுடலைமாடன் மறுத்ததால் அவரை ஜாதி பெயரை சொல்லி திட்டி இழிவாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுடலைமாடன் கடந்த மார்ச் 17-ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

சாதிய வன்கொடுமை
இந்த சம்பவம் உடன்குடி பேரூராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுடலைமாடன் தற்கொலைக்கு காரணமான பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆயிஷா கல்லாசி மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் பாபு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உடன்குடி பேரூராட்சியில் பணியாற்றும் 24 தூய்மை பணியாளர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து தூய்மை பணியாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

நேரில் சென்ற கனிமொழி
இந்நிலையில் சாதிய வன்கொடுமையால் தற்கொலை செய்து உயிரிழந்த தூய்மைப் பணியாளர் சுடலைமாடன் குடும்பத்திற்கு திமுக எம்.பி கனிமொழி நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்து, தமிழ்நாடு அரசின் ரூ.5 லட்சம் நிவாரண உதவித்தொகைக்கான காசோலையை வழங்கினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, "தூய்மைப் பணியாளர் சுடலைமாடனை சாதி ரீதியாக திட்டிய முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆயிஷா கல்லாசி, பேரூராட்சி செயல் அலுவலர் பாபு இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள். குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர். அவர்களை காவல்துறையினர் தேடிக் கொண்டிருக்கிறது. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்" எனத் தெரிவித்தார்.

பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்
மேலும் பேசிய கனிமொழி எம்.பி., குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. நான் உறுதியாக உள்ளேன். குற்றவாளிகள் கைது செய்யப்படுவதை யாரேனும் தடுத்தால் நம் முதலமைச்சர் ஏற்றுக்கொள்ளமாட்டார் எனத் தெரிவித்தார். மேளும், தற்போதைய பேரூராட்சி தலைவர் ஹிமிரா ரமீஷ் பாத்திமா மீதும் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கனிமொழி உறுதிபடத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications