தூத்துக்குடியில் விசாரணை கைதி மரண வழக்கு.. டிஎஸ்பி, 8 போலீசாருக்கு ஆயுள் தண்டனை! நீதிமன்றம் அதிரடி
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி வின்செண்ட் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கில் தூத்துக்குடி மாவட்ட டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உள்பட 9 காவலர்களுக்கும் ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு விசாரணைக் கைதி வின்செண்ட் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணையில், நீதிபதி தாண்டவம், டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உள்பட 8 காவலர்களுக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் தலா ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

திருவிழா பார்க்க சென்றவர்
தூத்துக்குடி மாவட்டம் அலங்கராத தட்டு பகுதியை சேர்ந்த உப்பள தொழிலாளி வின்செண்ட் (வயது 36). இவருடைய மனைவி கிருஷ்ணம்மாள். வின்செட்ன்டும், அவரது நண்பர் முத்து (34) என்பவரும் கடந்த 17.09.1999- ஆம் ஆண்டு அங்குள்ள விநாயகர் கோவிலுக்கு சென்றுள்ளனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் திருவிழாவிற்கு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை.
திருவிழா பார்க்க சென்ற கணவர் வின்செண்ட் திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த மனைவி கிருஷ்ணம்மாள், அவரை அக்கம் பக்கத்தில் தேடினார். மேலும் தெரிந்தவர்களிடம் சொல்லியும் விசாரித்தார். அப்போது வின்செண்டை போலீசார் கைது செய்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் நிலையத்திற்கு சென்ற கிருஷ்ணம்மாளுக்கு அவரது கணவரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. இதனால் வேதனையுடன் வீடு திரும்பினார் கிருஷ்ணம்மாள்.
3 பேரையும் அடித்து தாக்கினர்
இதற்கிடையே மறுநாள் கிருஷ்ணம்மாளுக்கு அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. அதாவது, போலீஸ் தாக்கியதில், வின்செண்ட், காவல் நிலையத்திலேயே இறந்ததாக தகவல் கிடைத்தது. வின்செண்ட் இறந்த தகவல் கேட்டு அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கணவர் மரணம் தொடர்பாக கிருஷ்ணம்மாள் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிட்டப்படது. அவர் நடத்திய விசாரணையில் பல திடுக்கும் தகவல் வெளியானது.
வின்சென்ட், முத்து மற்றும் அதே பகுதியை சேர்ந்த மரியதாஸ் ஆகிய 3 பேரையும் வெடிபொருட்கள் வைத்திருந்தது தொடர்பான வழக்கு விசாரணைக்காக தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையிலான காவலர்கள் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். அதன்பிறகு ஸ்டேஷனில் வைத்து பணியில் இருந்த அனைத்து காவலர்களும் சேர்ந்து வின்சென்ட் உள்ளிட்ட 3 பேரையும் அடித்துள்ளனர்.
11 பேர் மீது வழக்கு
இதில் காயம் அடைந்த வின்சென்ட் காவல் நிலையத்திலேயே உயிரிழந்தார். முத்து, மரியதாஸ் ஆகியோரும் காயம் அடைந்தனர். போலீசார் அடித்ததாலாயே வின்செண்ட் பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியானது. இதையடுத்து, தாளமுத்து நகரில் அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த சோமசுந்தரம், பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர்கள் ஜெயசேகரன், ராமகிருஷ்ணன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் பிச்சையா, வீரபாகு, சிவசுப்பிரமணியன், ஏட்டு ரத்தினசாமி, போலீஸ்காரர்கள் ஜோசப்ராஜ், செல்லத்துரை, சுப்பையா, பாலசுப்பிரமணியம் ஆகிய 11 பேர் மீது அடைத்து வைத்து தாக்குதல், கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
9 பேருக்கும் ஆயுள் தண்டனை
இந்த வழக்கு தொடர்பான விசாரணை தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து ஏப்ரல் 5-ஆம் தேதி (சனிக்கிழமை) தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஓய்வுபெற்ற சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன், ஓய்வுபெற்ற ஏட்டு ரத்தினசாமி ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதால் அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
தற்போது பதவி உயர்வு பெற்று ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பியாக உள்ள ராமகிருஷ்ணன் மற்றும் தற்போது நில அபகரிப்பு பிரிவில் இன்ஸ்பெக்டராக உள்ள சோமசுந்தரம், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பிச்சையா, ஓய்வுபெற்ற சப் இன்ஸ்பெக்டர் ஜெயசேகரன், ஓய்வுபெற்ற சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வீரபாகு, ஓய்வுபெற்ற போலீஸ்காரர்கள் ஜோசப்ராஜ், செல்லத்துரை, சுப்பையா, பாலசுப்பிரமணியம் ஆகிய 9 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தாண்டவன் தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications