200 கேட்டால் 20 ரூபாய் நோட்டை தந்த ஏடிஎம்! பார்த்து ஷாக் ஆன ஸ்விக்கி ஊழியர்! தூத்துக்குடியில் பரபர
தூத்துக்குடியில் இருக்கும் ஏடிஎமில் குறைந்த தொகை வந்தது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தூத்துக்குடி: கோவில்பட்டியில் இருக்கும் தனியார் ஏடிஎம் மையம் ஒன்றில் 200 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக 20 ரூபாய் நோட்டுகள் வந்த ஷாக் சம்பவம் நடந்துள்ளது.
இப்போது வங்கிகளுக்கு நேரடியாகச் சென்று பணத்தை பெரும்பாலும் யாருமே எடுப்பதில்லை. கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலுமே ஏடிஎம் இருக்கும் நிலையில், அதன் மூலமே அனைவரும் பணம் எடுக்கிறார்கள்.
எப்போது வேண்டுமென்றாலும் பணம் எடுக்க முடியும், சில நிமிடங்களில் பணம் எடுத்துவிடலாம் உள்ளிட்ட பல காரணங்களால் ஏடிஎம் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

ஏடிஎம் பிரச்சினை
இருப்பினும், சில நேரங்களில் ஏடிஎம் இயந்திரங்கள் நமக்குச் சம்பவம் செய்துவிடும். அதாவது நாம் பணம் எடுக்கச் சென்றால் பணம் வராது.. அல்லது ஏதாவது தொழில்நுட்ப பிரச்சினையால் பரிவர்த்தனையே கேன்சலாகிவிடும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது தூத்துக்குடியில் நடந்துள்ளது. அங்குத் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏடிஎம் மையத்தில் 200 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக 20 ரூபாய் நோட்டுக்கள் வந்ததாகப் புகார் எழுந்துள்ளது.

குறைவாக வந்த பணம்
தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி அருகே சாலைப் புதூர் என்ற இடத்தில் தனியார் ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. நேற்று அங்குச் சென்ற ஐயப்பன் என்ற ஸ்விக்கி ஊழியர் அந்த ஏடிஎம் மையத்திற்குச் சென்று பணம் எடுத்துள்ளார். தனது ஏடிஎம் கார்டு மூலம் 3500 ரூபாய் பணம் எடுத்துள்ளார். இருப்பினும், அவருக்கு 380 ரூபாய் பணம் குறைவாக.. அதாவது 3140 ரூபாய் மட்டுமே வந்துள்ளது.

200க்கு பதில் 20 ரூபாய் நோட்டுகள்
அதாவது ஆறு 500 ரூபாய் நோட்டுகள், ஒரு 100 ரூபாய் நோட்டு சரியாக வந்துள்ளது. இருப்பினும், இரண்டு 200 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக 2 இருபது ரூபாய் நோட்டுகள் கூறப்படுகிறது. இதைப் பார்த்தவுடன் அவர் அதிர்ச்சியடைந்துவிட்டார். பணம் குறைவாக வந்துள்ள நிலையில், இது தொடர்பாகப் புகார் அளிக்க அவர் முயன்றுள்ளார். இருப்பினும், அந்த ஏடிஎம் மையத்தில் எந்தவொரு புகார் எண்ணும் இல்லை. இதனால் என்ன செய்வதென்று புரியாமல் அவர் குழம்பிவிட்டார்.

அதிகாரிகள் ஆய்வு
இதையடுத்து அவர், தான் கணக்கு வைத்திருந்த வங்கியைத் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். இதையடுத்து சம்பந்தப்பட்ட தனியார் ஏடிஎம் மையத்தின் பணம் நிரப்பும் பணிகளைக் கவனித்து வரும் தனியார் நிறுவன ஊழியர்கள் குறிப்பிட்ட ஏடிஎம் மையத்தை ஆய்வு செய்தனர். ஏடிஎம் இயந்திரத்தில் 20 ரூபாய் நோட்டு வர வாய்ப்பு இல்லை என்று கூறிய அவர்கள், இருப்பினும் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து.. 20 ரூபாய் நோட்டுகள் வந்தது உறுதியானால் மூன்று நாட்களுக்கு உரியத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என உறுதியளித்தனர்.

அம்பத்தூர் சம்பவம்
இப்படி ஏடிஎம் இயந்திரத்தில் குறைவாகக் காசு வந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏடிஎம் மையங்களில் இதுபோன்ற குளறுபடிகள் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு அம்பத்தூரில் இருக்கும் ஏடிஎம் மையம் ஒன்றில், 200 ரூபாய் நோட்டுகள் வைக்க வேண்டிய இடத்தில் 500 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்ததால்.. பணம் எடுக்கச் சென்ற அனைவருக்கும் கூடுதல் தொகை வந்தது நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications