'மோடியின் தொலைநோக்கு திட்டத்தால் இந்தியா சக்தி மிக்க நாடாக உயர்ந்துள்ளது' - மத்திய அமைச்சர் பேச்சு
தூத்துக்குடி: பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டத்தின் காரணமாக இந்தியா சக்தி மிக்க நாடாக உயர்ந்து வருகிறது என மத்திய கப்பல், நீர்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் கூறினார்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.100 கோடியில் பொருளாதார மேம்பாட்டு மண்டலம் அமைப்பது உள்பட ரூ.231.21 கோடி மதிப்பில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் மத்திய கப்பல், நீர்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் கலந்துகொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

அடிக்கல் நாட்டு விழா
குறிப்பாக தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் 1300 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவிருக்கும் கடலோர வேலைவாய்ப்பு அபிவிருத்தி திட்டத்திற்கு (Tuticorin SPEEDZ) அடிக்கல் நாட்டினார். இதேபோல் ரூ.16 கோடி செலவில் நிலக்கரி சேமிப்பு சாலை மற்றும் வடிகாலினை மேம்படுத்துதற்கான பணியினையும் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து ரூ.65.53 கோடி செலவில் உள்துறைமுக வளர்ச்சி பணிகளான (துறைமுக நுழைவுவாயிலை அகலப்படுத்துதல் மற்றும் அகலப்படுத்தப்பட்ட பகுதியை ஆழப்படுத்துதல்) பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

LED ஒளிவிளக்கு பயன்பாடு
பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி, ரூ.26.93 கோடி செலவினாலான பசுமை துறைமுக திட்டங்களான 100 சதவிகிதம் LED ஒளிவிளக்கு பயன்பாடு மற்றும் மின்சாரத்தால் இயங்க கூடிய கார்கள் மற்றும் 140 கிலோவாட் திறன் கொண்ட மேற்கூரை சூரிய மின் ஆலைகள் ஆகியன தொடங்கி வைக்கப்பட்டது. இதேபோல் பொதுமக்கள் பயன்படுத்த கூடிய வாகன மின்வூட்டி மையங்கள், 2 மெகாவாட் காற்றாலை, 400 கிலோவாட் மேற்கூரை சூரியமின் ஆலை ஆகிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

60 சதவிகிததற்கு
தொடர்ந்து நிகழ்ச்சியில் மத்திய கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீர்வழி போக்குவரத்து மற்றும் ஆயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனாவால் பேசியதாவது:- வருகிற 2025-ம் ஆண்டிற்குள் நமது நாடு 5 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார வளர்ச்சியினை அடையும். இதை அடைவதற்கு முக்கிய காரணியான போக்குவரத்து தளவாட செலவுகளை குறைக்க அனைத்து முயற்சியையும் அரசு செய்து வருகிறது. வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தால் எடுக்கப்பட்டுள்ள பசுமை துறைமுக முயற்சிகள், 2030-ம் ஆண்டிற்குள் நம் நாட்டில் புதுப்பிக்கப்பட்ட எரிசக்தியின் பங்கை 60 சதவிகிததற்கு அதிகரிக்க அனைத்து பெரிய துறைமுகங்களுக்கும், வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தரநிலையை உருவாக்கியுள்ளது.

சக்தி மிக்க நாடாக
மேலும் அவர் கூறுகையில், '' பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டத்தின் காரணமாக இந்தியா சக்தி மிக்க நாடாக உயர்ந்து வருகிறது. முன்பு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தபடி, இந்திய அரசு வ.உசிதம்பரனார் துறைமுகத்தினை நாட்டின் கிழக்கு கடற்பகுதியின் சரக்குபெட்டக பரிமாற்ற முனையமாக மாற்ற அனைத்துவித முயற்சிகளையும் மேற்கொள்ளும்'' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications