ஆன்லைன் ரம்மியால் தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்.. தூத்துக்குடியில் ‘பகீர்’ சம்பவம்!
தூத்துக்குடி : ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்தவர்கள் பலர் தற்கொலை செய்து கொள்ளும் சோக நிகழ்வுகள் தொடர்ந்து வரும் நிலையில் தற்போது ஆன்லைன் ரம்மியால் கொலை நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த தம்பியை அண்ணன் வெட்டிக்கொன்ற சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறி உள்ளது.
ஆன்லைன் சூதாட்டகளால் பணத்தை பறிகொடுத்து கடனாளியான பலர் தற்கொலை செய்யும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இதைத்தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது. அதற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆன்லைன் ரம்மியால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை ஒன்று நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி தில்லானத்தம் பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் கொண்ட இவர் இந்த விளையாட்டின் மூலம் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்திருக்கிறார்.
தனது அண்ணன் முத்துராஜிடம் ரூ. 3 லட்சம் கடனாகப் பெற்று, அந்த பணத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்திருக்கிறார். இந்நிலையில் முத்துராஜ் தான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்குமாறு தம்பியிடம் கேட்டுள்ளார். அதற்கு தங்களது பூர்வீக வீட்டை விற்று பணம் தரும்படியும், மொத்தமாக திருப்பித் தந்து விடுவதாகவும் தனது அண்ணனிடம் கூறியிருக்கிறார் நல்லதம்பி.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு முத்துராஜ், நல்லதம்பியை வண்டியில் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை கம்பியால் தலையில் தாக்கி, வெட்டிக் கொலை செய்துள்ளார்.
இதையடுத்து போலீசில் சரணடைந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக சிப்காட் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து முத்துராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தால் கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications