ஆவினை பார்த்து தனியார் நிறுவனங்கள் மிரண்டுவிட்டன! தட்டுப்பாடு எல்லாம் இல்லை! அமைச்சர் நாசர் நறுக்
ஆவின் பால் விற்பனையில் தட்டுப்பாடு என்ற புகாருக்கு அமைச்சர் நாசர் விளக்கமளித்துள்ளார்.
தூத்துக்குடி: தமிழ்நாட்டில் ஆவின் பாலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கடந்த சில நாட்களாகத் தகவல்கள் பரவின. இதனிடையே தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், பனிக் காலத்தில் பால் உற்பத்தி குறைவது வழக்கம் என்றும் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் மாநில அரசின் நிறுவனமான ஆவின் மூலம் பால் விற்பனை செய்யப்படுகிறது. இப்போது தனியார் நிறுவனங்களின் பால் விலையைக் காட்டிலும் ஆவின் விலை குறைவு என்பதால் பலரும் இதில் ஆர்வமாக உள்ளனர்.
இதற்கிடையே கடந்த சில மாநிலத்தில் பல இடங்களில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. காலையில் பால் வரத் தாமதமாவதாகவும் வரும் போதிலும் வழக்கத்தை விடக் குறைவாக உள்ளதாகப் புகார்கள் எழுந்தன.

புகார்கள்
அதிலும் குறிப்பாகத் தூத்துக்குடி மாவட்டத்தில் தினசரி 38,000 லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இருப்பினும், இப்போது, கடந்த ஒரு வாரமாக 28,000 லிட்டர் பால் மட்டுமே விநியோகம் செய்யப்படுவதாகத் தகவல் வெளியானது. இதனால் பல இடங்களில் பாலுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் புகார் கிளம்பியது. காலை தாமதமாகப் பால் இறக்குமதி செய்யப்பட்டு 9 மணிக்கு பிறகே விநியோகம் நடப்பதாகவும் புகார் கிளம்பியது.

அமைச்சர் நாசர்
இந்நிலையில், இன்று நேரடியாகக் களத்தில் இறங்கிய அமைச்சர் நாசர் தூத்துக்குடி மாவட்ட ஆவின் அலுவலகத்தில் ஆய்வு செய்தார். பால் கொள்முதல் மற்றும் விநியோகம் தொடர்பான ஆவணங்களை அமைச்சர் நாசர் ஆய்வு செய்தார். மேலும், பால் குறித்த நேரத்தில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். அந்த ஆய்வில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி நேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரும் உடன் இருந்தனர்.

அமைச்சர் விளக்கம்
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தூத்துக்குடியில் சில இடங்களில் மட்டுமே பால் வரவில்லை என்ற புகார் இருந்தது. பால் உற்பத்தி குறைந்ததே இதற்குக் காரணம். தூத்துக்குடிக்கு 26,000 லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகிறது. பனிக் காலங்களில் இதுபோல ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். தட்பவெப்ப சூழல் காரணமாகப் பால் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதுவும் இப்போது தீர்க்கப்பட்டுள்ளது. கூடுதலாகப் பால் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வாய்ப்பே இல்லை
மேலும், போக்குவரத்தில் ஏற்பட்ட சிறிய மாற்றம் காரணமாகப் பால் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டது. அதைச் சரி செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பால் அளவு குறைகிறது எனக் கூறுவது தவறான தகவல், தரக் கட்டுப்பாடு, உணவு கட்டுப்பாடு ஆவின் என்ஜினீயர்கள் ஆய்வுக்குப் பின்னரே பால் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே, பால் அளவு குறைய வாய்ப்பே கிடையாது. விரைவில் கோடைக் காலம் தொடங்கும் நிலையில், ஆவின் சார்பில் புதுவித ஐஸ்கிரீம்களை தயாரிக்க உள்ளோம்.

கலப்படம் இல்லை
இப்போது பால் கொள்முதல் விலையையும் ரூ.35ஆக உயர்த்தி உள்ளோம். ஆவின் இப்போது தனி பிராண்டாக இருக்கிறது. ஆவினில் எவ்வித கலப்படமும் இல்லாமல் பால் விற்கப்படுகிறது. ஏனென்றால் ஆவின் பொதுமக்கள் சேவைக்காக இயங்கும் நிறுவனம். லாப நோக்கில் இயங்கும் நிறுவனம் இல்லை. ஆவின் பொருட்கள் தரமாக உள்ளதால் மக்கள் ஆவின் பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் மற்ற தனியாருக்கு நாங்கள் போட்டியாக மாறிவிட்டோம்.

மிரண்ட தனியார் நிறுவனங்கள்
கடந்த தீபாவளி காலத்தில் முன்பு எப்போதையும் விட 140 கோடி ரூபாய்க்கு இனிப்புகள் விற்பனையானது. தனியார் நிறுவனங்கள் எங்களைப் பார்த்து மிரள ஆரம்பித்துவிட்டனர். கோடைக் காலத்திற்கு ஐஸ்கிரீம் விற்பனையிலும் தனிக் கவனம் செலுத்தி, அதிக அளவில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். குறிப்பாக, ஐஸ்கீரிம்களை அண்டை மாநிலங்களுக்கும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications