ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியது... முதற்கட்டமாக 34 மெட்ரிக் டன் உற்பத்தி..!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜன் விநியோகம் இன்று தொடங்கியது.
ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து ஆக்சிஜனுடன் புறப்பட்ட முதல் டேங்கர் லாரி, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றது. இதற்கு அடுத்ததாக சென்னை, கோவை, உள்ளிட்ட நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டது.

நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாகுறை காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வந்த நிலையில், தாங்களாக முன்வந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்து கொடுப்பதாக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் கூறியது.
இதையடுத்து தமிழகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தற்காலிக அனுமதி கொடுக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு தேவையான மின்சாரம், குடிநீர், உள்ளிட்ட இதர வசதிகளை தமிழக அரசே செய்து கொடுத்தது. 320 பணியாளர்களை கொண்டு ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்குவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதுவரை நடைபெற்ற சோதனை ஓட்டம் நிறைவடைந்த நிலையில் நேற்றிரவு முதல் ஆக்சிஜன் உற்பத்தி அங்கு தொடங்கப்பட்டது.
அதனடிப்படையில் இன்று முதல் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் விநியோகம் நடைபெறுகிறது. இதற்காக ஸ்டெர்லைட் ஆலை முன்பாக ஆக்சிஜனை ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் அணிவகுத்து நிற்கின்றன. முதல் நாளான இன்று 34 மெட்ரிக் டன் அளவு மட்டுமே அங்கு ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நாளை மறுதினம் முதல் ஆக்சிஜன் உற்பத்தி 40 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலில், ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து விநியோகம் செய்யப்படும் ஆக்சிஜன் உயிரிழப்புகளை பெருமளவில் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications