மோடிக்கு எதிராக கருப்பு கொடியுடன் குதித்த காங்கிரசார்.. பரபர நெல்லை, தூத்துக்குடி! கைது செய்த போலீஸ்
தூத்துக்குடி: தூத்துக்குடிக்கு பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்து உள்ளார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தந்து இருக்கிறார். நேற்று மாலை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பா.ஜ.க என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மதுரை புறப்பட்ட மோடி அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பின்னர் மீனாட்சியம்மன் கோயில் சாமி தரிசனம் செய்தார். இதனை அடுத்து இன்று தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கிறார்.

குறிப்பாக குலசேகரன்பட்டினத்தில் புதிதாக அமைக்கப்படும் ராக்கெட் ஏவுதள பணிக்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார். அதேபோல் துத்துக்குடி வ.உ.சி. துறைமுக விரிவாக்க திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் தூத்துக்குடி மற்றும் நெல்லையில் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை வெளியிட்ட அறிவிப்பில், "இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதையும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் தடுக்க தவறிய ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., அவர்கள் தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ., தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, ஈ.வெ.கி.ச. இளங்கோவன், எம்.எல்.ஏ., சு.திருநாவுக்கரசர், எம்.பி., எம். கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் புதன்கிழமை காலை 10.30 மணியளவில் கடற்கரை சாலையில் உள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெறும்.
சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் சிவராஜசேகரன், எம்.சி., எம்.எஸ். திரவியம், எம்.சி., ஜெ. டில்லிபாபு, எம்.சி., எம்.பி. ரஞ்சன்குமார், திரு. எம்.ஏ. முத்தழகன், திரு. அடையாறு த. துரை ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்துவார்கள். இதில் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள், மற்றும் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்பார்கள்." என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications