திமுக ஆட்சியில் தான் வெயில் காலத்தில் கூட மழை பெய்கிறது! அமைச்சர் எ.வ.வேலு கலகலப்பு!
தூத்துக்குடி: திமுக ஆட்சியில் தான் வெயில் காலத்தில் கூட மழை பெய்வதாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
பரந்தூர் விமான நிலையத்தை பொறுத்தவரை அரசு சார்பில் கையப்படுத்தப்படும் இடங்களுக்கு உரியத் தொகையும் அப்பகுதி மக்கள் குடியேறுவதற்கு இலவசமாக நிலமும் வழங்கப்படும் என்ற உறுதியை அளித்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

முதல்வர் சுற்றுப்பயணம்
முதலமைச்சர் ஸ்டாலின் வரும் செப்டம்பர் 7, 8 ஆம் தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செல்லவுள்ளார். இதனால் அவரது வருகைக்காக முன்பாக அங்கு ஆய்வுக்குச் சென்ற பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, முதல்வர் தொடங்கி வைக்கவுள்ள திட்டங்களின் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்ததுடன் நேரிலும் பணிகளை பார்வையிட்டார்.

ஏன் பரந்தூர்?
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்க தாம்பரம் பகுதியில் முதலில் நிலம் ஆய்வு செய்யப்பட்டதாகவும் அங்கு விமானப் படைக்கு சொந்தமான விமான படைத்தளம் இருந்ததால் கிழக்கு கடற்கரை பக்கம் அமைக்கலாம் என தீர்மாணித்து அங்கும் ஆய்வு நடத்தியதாக தெரிவித்தார். கல்பாக்கம் அணுமின் நிலையம் இருப்பதால் விமான நிலையம் அமைக்க அந்தப் பகுதியும் உகந்ததாக இருக்காது என்பதால் இறுதியாக பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

8 வழிச்சாலை
பரந்தூரில் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கும், வீடுகளுக்கும் உரிமையாளர்களிடம் உரியத் தொகை வழங்கப்படும் என்றும் புதிய வீடு கட்டிக்கொள்ள அரசு சார்பில் தனியாக நிதி வழங்கப்படுவதுடன் இலவசமாக விமான நிலையத்தை ஒட்டியே மாற்று இடங்களும் வழங்கப்படும் என்ற உறுதியையும் அளித்தார். மேலும், சேலம் சென்னை 8 வழிச்சாலைத் திட்டத்தை பொறுத்தவரை விவசாயிகளிடம் அழைத்துப் பேசி அதன் பின்னர் முதல்வர் முடிவெடுக்கச் சொன்னார் எனக் கூறினார்.

வெயில் காலத்தில் மழை
புதிய சாலைகள் அமைக்கத் தான் அரசு இருக்கிறது என்றும் தமிழகம் முழுவதும் அரசுக்கு வரும் பெரும்பாலான கோரிக்கை மனுக்களில் சாலை சரியில்லை என்பது தான் பிரதான குறையாக இருப்பதாகவும் தெரிவித்தார். இதனிடையே திமுக ஆட்சியில் தான் வெயில் காலத்தில் கூட மழை பெய்வதாகவும் கூறி அதிகாரிகளையும், கட்சிக்காரர்களையும் கலகலப்பாக்கிவிட்டு தூத்துக்குடியிலிருந்து அமைச்சர் எ.வ.வேலு புறப்பட்டார்.












Click it and Unblock the Notifications