சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்.. 6 போலீசார் மீது சிபிசிஐடி கொலை வழக்கு பதிவு
தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் சித்திரவதை மரணம் தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ் உட்பட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இரண்டு பேர் மரணம் அடைந்தது நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 19ஆம் தேதி போலீசால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கோவில்பட்டி சிறையிலேயே மர்ம மரணம் அடைந்தனர்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பலியானதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

சிபிசிஐடி விசாரணை
இதையடுத்து இன்று முதல் சிபிசிஐடி போலீசார் இந்த விசாரணையை கையில் எடுத்துள்ளனர். அவர்கள் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஆய்வு செய்தனர். பிறகு ஜெயராஜ் வீட்டுக்குச் சென்று, அவர், குடும்பத்தாரிடம், நடந்தவை குறித்து கேட்டறிந்தனர். இன்று காலையில் இருந்து சிபிசிஐடி போலீசார் இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.

மதுரை ஹைகோர்ட் கிளை
இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணை நடத்திக் கொண்டிருக்க கூடிய மதுரை ஐகோர்ட் கிளை, தந்தை மற்றும் மகன் ஆகியோருக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அடிப்படையில் பார்த்தால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருக்கிறது என்று திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது. இதனால் அந்த போலீசார் மீது எப்போது வேண்டுமானாலும் கொலை வழக்கு பதிவு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது .

விசாரணைக்கு பிறகுதான் முடிவு
இந்த நிலையில் இன்று தூத்துக்குடியில் சிபிசிஐடி ஐஜி சங்கரிடம் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்வீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், விசாரணைக்கு பிறகுதான் அதுபற்றி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். அதே சமயம் இன்று இரவுக்குள் அந்த போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளது என்று செய்திகள் வந்த வண்ணம் இருந்தது .

என்ன திருப்பம்
இந்த நிலையில் தொடர் அழுத்தங்கள் காரணமாக சிபிசிஐடி போலீசார் இன்றே இதில் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். சாத்தான்குளம் மரணம் தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ் உட்பட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். முக்கியமாக உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுவரை பதிவு செய்யப்பட்டு இரண்டு எப்ஐஆரையும் கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர். கஸ்டடியில் உயிரிழப்பு (176) என பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் 302 பிரிவு (கொலை) வழக்கு பதிவு செய்துள்ளனர். சாத்தான்குளம் வழக்கில் இது அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications