சாத்தான்குளம் மரண வழக்கு.. 5 போலீசாரும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்.. என்ன காரணம்?
தூத்துக்குடி: சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து போலீசாரும் தற்போது மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
லாக்டவுன் நேரத்தில் கடை திறந்ததாக சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கடந்த 19ம் தேதி கைது செய்யப்பட்ட இவர்கள் இரண்டு நாட்கள் கழித்து மரணம் அடைந்தனர்.

அவர்கள் இருவரும் போலீசாரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பலியானதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
இந்த சாத்தான்குளம் மரணம் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. இந்த வழக்கில் குற்றவாளிகள் எல்லோரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இரண்டு நாட்கள் முன்பு எஸ்ஐ ராகுகணேஷ் இதில் கைது செய்யப்பட்டார்.
அதன்பின் மூன்று போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர், முன்னாள் துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவலர் முருகன் சிபிசிஐடி மூலம் கைது செய்யப்பட்டனர்.
அதன்பின் நேற்று இரவு காவலர் முத்துராஜ் தற்போது கைது செய்யப்பட்டார். இவர்கள் எல்லோருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டது. நேற்று தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் மீது கொலை வழக்கு பதியப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இவர்கள் ஐந்து பேர் நீதிமன்ற விசாரணைக்கு பின் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் இரண்டு நாட்கள் அந்த சிறையில் இருந்தனர். தற்போது பாதுகாப்பு காரணங்களுக்காக இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 5 போலீசாரும் பேரூரணி சிறையில் இருந்து தற்போது மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications