தூத்துக்குடியில் வெள்ளம் வடிந்ததுமே.. மிதக்கத் தொடங்கிய மது பிரியர்கள்! டாஸ்மாக் திறந்ததால் ஹேப்பி
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் 4 நாட்களுக்குப் பிறகு இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. நீண்ட வரிசையில் நின்று மது பிரியர்கள் மதுவை வாங்கி சென்றனர்.
நெல்லை, தூத்துக்குடி உள்பட தென் மாவட்டங்களில் கடந்த 17, 18 ஆம் தேதிகளில் கனமழை பெய்தது. வரலாறு காணாத அளவுக்கு இந்த இரண்டு மாவட்டங்களிலும் பெருமழை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 95 செ.மீட்டர் மழை பெய்தது. வானத்தில் இருந்து அருவி போல இடைவிடாது கொட்டிய மழையால் இரண்டு மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதந்தன.

இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கிப் போனது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. நெல்லை ரயில் நிலையம், சந்திப்பு பேருந்து நிலையம் வெள்ளத்தில் மிதந்தன.
ஒரு பேருந்தே முழ்கும் அளவுக்கு வெள்ளம் சூழ்ந்து இருந்ததால் மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகினர். அதேபோல், தூத்துக்குடி மாவட்டமும் மிகக் கடுமையான பாதிப்பை சந்தித்தது. இப்போது கூட தூத்துக்குடியின் பல இடங்களில் வெள்ள நீர் வடியவில்லை. தாமிரபரணி கரையோரம் உள்ள ஆத்தூர், புன்னக்காயல், முக்காணி உள்ளிட்ட கிரமங்களில் இன்னும் வெள்ளம் முழுமையாக வடியாத நிலையே உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. வெள்ள பாதிப்பு காரணமாக தூத்துக்குடியில் டாஸ்மாக் கடைகளும் கடந்த 4 தினங்களாக மூடப்பட்டு இருந்தன. பல டாஸ்மாக் கடைகளுக்குள்ளும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், 4 நாட்களுக்குப் பிறகு இன்று டாஸ்மாக் கடைகள் தூத்துக்குடியில் திறக்கப்பட்டன.
இதனால், பல கடைகளிலும் குடிமகன்களின் கூட்டம் அலை மோதியது. நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கூட வெள்ள நிவாரணம் எதுவும் கொடுக்கிறார்களா. .இவ்வளவு கூட்டமாக உள்ளதே என திரும்பி திரும்பி பார்த்தபடியே சென்றனர்.
பின்னர் டாஸ்மாக் கடைமுன் தான் இவ்வளவு கூட்டம் என தெரிந்ததும் வெள்ளத்தில் மிதந்ததை மறந்து விட்டு தற்போது மிதக்க ஆரம்பித்து விட்டார்களே என தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக சென்றதையும் காண முடிந்தது. தூத்துக்குடியில் இன்னும் சில இடங்களில் வெள்ள நீர் வடியாததால் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications