திருச்செந்தூர் கடலில் அதென்ன? பார்க்க கம்பி கம்பியா இருக்கே.. முருகன் கோயில் கிட்டயே நடக்கும் மாற்றம்
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேகத்தையும் நடத்திட வேண்டும் என்பதற்காகவே திருப்பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன.. மற்றொருபக்கம் கடல் பகுதியிலும் நிறைய மாற்றங்கள் தென்பட்டு வருகின்றன. என்ன காரணம்?
அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலானது கடற்கரை அருகில் அமைந்திருக்கிறது. உலகளவில் புகழ்பெற்ற இந்த கோயிலில் விஷேச, விரத, விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சாதாரண நாள்களில் நூற்றுக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் பெற்று செல்வது வழக்கமாகும்.

பக்தர்களின் வசதிக்காகவே, இந்த கோயிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் ஏராளமான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. முக்கியமாக, 15 வருடங்களுக்கு பின்னர், திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், கும்பாபிஷேகத்தை அடுத்த வருடம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பணிகள்: எனவே, கடந்த 2022-ம் ஆண்டு முதல் பணிகளும் நடந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக ரூ.16 கோடி மதிப்பீட்டில் ராஜகோபுர திருப்பணிகள் ஆரம்பித்து நடக்கின்றன. 137 அடி உயரமும், 9 நிலைகளையும், 9 கலசங்களையும் கொண்ட ராஜகோபுரத்தை முற்றிலும் அதன் பழமை மாறிவிடாமல், புதுப்பிக்கும் பணியும், ராஜகோபுரத்தின் கீழ்த்தள பகுதிகள், தூண்கள் ஆகியவற்றை புதுப்பிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
அதேபோல, ராஜகோபுரத்தின் மேலுள்ள 9 கலசங்கள் ஆகம விதிப்படி பூஜை செய்யப்பட்டு தனியாக பிரித்து கீழே கொண்டு வந்து புதுப்பிக்கும் பணிகளும் ஜரூராக நடந்துள்ளன. அப்போது 9 கலசங்களிலுள்ள பழைய வரகு மாற்றப்பட்டபோது, கலசத்துக்குள் இருந்த வரகு, அதன் தன்மை மாறாமல் அப்படியே இருந்ததை பார்த்து அறநிலையத்துறை அதிகாரிகளும், பக்தர்களும் ஆச்சரியப்பட்டு போனார்களாம்.
ராஜகோபுரம்: இதுபோலவே கடற்பகுதியிலும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.. கடலிலிருந்து 67 மீட்டர் தூரத்தில் இந்த கோயில் உள்ளது.. 137 அடி உயரமுள்ள ராஜகோபுரம், கடற்கரையிலிருந்து 140 மீட்டர் தூரத்தில் உள்ளது. கருங்கற்களால் கோயில் கட்டப்பட்டுள்ளதால், கடல் காற்று மற்றும் ஈரப்பதத்தில் அரிப்பு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
ஏனினும், கோயிலில் கிழக்கு மற்றும் வடக்கு கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள தடுப்புச்சுவர்கள் புயல் மற்றும் கடல் அரிப்பினால் சேதமடைந்துள்ளன.. அதனால் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கோயில் கிழக்கு கடற்கரை பகுதியிலிருந்து, வடக்கு பகுதி கடற்கரை வரையிலும், ரூ.19.80 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பிணை தடுக்கும் வகையில் சுற்றிலும் தடுப்புச்சுவர்கள் அமைக்கும் பணிகள், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மீன்வளத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நவீன தடுப்பு சுவர்: இதில், முதல்கட்டமாக வள்ளிக்குகை அருகேயுள்ள கடற்கரையில் ஜேசிபி உதவியுடன் கருங்கற்கள் கொட்டப்பட்டு தொழிலாளர்களால் கம்பி வலைகள் மற்றும் தார் கயிறினால் கட்டித் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
496 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலம், 6 மீட்டர் உயரத்தில் 200 மி.மீ அளவுக்கு குறையாத கருங்கற்கள் மேல் இடைவெளி இல்லாமல் நிரப்பி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கம்பியினாலான பெட்டி (கேபியன் பாக்ஸ்) மூலம் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது.
கேபியன் பாக்ஸ்: இந்த கேபியன் பாக்ஸ் தொழில்நுட்பமானது, கடினமான கடல் அலைகளின் அரிப்பினையும் தாங்கக்கூடியதாம்.. நீண்ட காலத்துக்கும் உழைக்கக்கூடியதாம்.. இந்தத் தடுப்புச்சுவர் அமைக்கப்படுவதால் கடல் வாழ் உயிரினங்களுக்கும், எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள்.
திருப்பணிகள்: முன்னதாக, திருப்பணி மண்டபம் மற்றும் முகமண்டபத்தில் தரையில் பதிக்கப்பட்டிருந்த, கோட்டா மற்றும் கடப்பா கற்கள் அகற்றப்பட்டு அவற்றிற்கு பதிலாக கருங்கல் பதிக்கப்படும் வேலையும் ஆரம்பமானது.. ஆனால், பழமை மாறாமல் பணிகள் நடக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்களாம் அதிகாரிகள்..
கும்பாபிஷேகத்திற்கு, கோயில் உள் வெளிபிரகாரம், ராஜகோபுரம், திருப்பணி மண்டபம் ஆகியவை 16.06 கோடி செலவில் ஆகம விதிகளின் படி தொல்லியல் துறையின் வழிகாட்டுதலை பின்பற்றி திருப்பணிகள் வேகமாக நடந்து வருவதாகவும் அறங்காவலர் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications